2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புதிய அதிபரை பாடசாலைக்கு வரவிடாமல் தடுத்த மாணவர்கள்

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கத்தை பாடசாலைக்கு வரவிடாமல் பாடசாலையின் நுழைவாயிலை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றது.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வந்த கா.பங்கையச்செல்வன், வடமாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய அதிபரொருவர் அப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டார்.

புதிய அதிபர் வருவதை விரும்பாத மாணவர்கள், தங்களுடைய பழைய அதிபரே பாடசாலைக்கு வேண்டுமெனக்கோரி, பதவியை ஏற்பதற்காக பாடசாலைக்குச் சென்ற புதிய அதிபரை உள்நுழைய விடாமல் நுழைவாயிலை பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

'அதிபரின் இடமாற்றம் அரசியல் நோக்கமா?', 'கோரிக்கை நிறைவேறும் வரையில் ஆர்ப்பாட்டம் தொடரும்', 'உண்ணாவிரதப் போராட்டமும் செய்வோம்', 'இலட்சியங்கள் மாறாது போராட்ட வடிவங்கள் மாறாலாம்' உள்ளிட்ட கோஷங்களை இதன்போது மாணவர்கள் எழுப்பினர்.

இச்சம்பவத்தையடுத்து, பாடசாலைக்குச் சென்ற கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேள், 'இது தன்னால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் இது வடமாகாண கல்வி அமைச்சின் முடிவு எனவும் இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர்தான் பதில் கூறவேண்டும்' எனவும் கூறினார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் பழைய அதிபர் வேண்டுமெனக்கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பாடசாலை முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், கிளிநொச்சி பாரதிபுரம் பாரதி வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றம் செய்தமையைக் கண்டித்து மேல்பிரிவு மாணவர்கள் பலர் பாடசாலைக்கு இன்று சமூகமளிக்கவில்லை.

அதிபரின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யாவிட்டால் நாளை வெள்ளிக்கிழமை (03) முதல் பகிஷ்கரிப்புச் செய்யவுள்ளதாக அந்தப் பாடசாலை மாணவர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .