2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறுமிகளை கடத்தி, இரத்தம் குடிக்கச் செய்த மாந்திரீகருக்கு 20 வருட சிறை

Kogilavani   / 2011 ஜூலை 09 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதின்மர் வயதான இரு சிறுமிகளை நைஜீரியாவிலிருந்து பிரிட்டனுக்கு கடத்திச் சென்று பல மாந்திரீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியபின் கட்டாய விபசாரத்தில் ஈடுபடவைத்த நபர் ஒருவருக்கு  21 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அன்டனி ஹரிசன் எனும் 32 வயதான இந் நபரே இத்தண்டனையை பெற்றுள்ளார். பிரிட்டனுக்கு வெளியேயுள்ள நபர்களை கடத்தி  வந்தமைக்காக பிரிட்டனில்  ஒருவருக்கு  சிறைத்தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனின் வூல்விச் பிராந்திய நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கியது.

நைஜீரியாயிலிருந்து வந்த அன்டனி ஹரிசன், பிரிட்டனில் தஞ்சம் கோரி சமர்ப்பித்த மனு ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் இவர் நைஜீரியாவிலிருந்து  14 மற்றும் 16 வயதான இரு சிறுமிகளை பிரிட்டனுக்கு கடத்தி கடுமையான மாந்திரீக சடங்குகளில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இச்சிறுமிகளில் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு உடலில் பல இடங்களில் கத்தியால் கீறி வெட்டி சவப்பெட்டியொன்றில் பல மணித்தியாலங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அச்சிறுமியிடம் கோழியொன்று வழங்கப்பட்டு கோழியின் இரத்தத்தை குடிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டது. மற்றொரு சிறுமி கோழியின் இதயத்தை உண்ணுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாள்.

ஹரிசன் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அக்குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜூஜூ எனும் இந்த மாந்திரீக நிகழ்வில் பங்குபற்றுபவர்கள் அங்கு நடப்பவற்றை வெளியில் சொல்லக் கூடாது எனவும் அப்படி சொன்னால் அவர்களை சாபம் துரத்தும் எனவும் கூறப்படுகிறது. இதனால் இதுவரை இத்தகைய கொடூரச் செயல்களில் பங்குபற்ற நிர்பந்திக்கப்பட்டவர்கள் அது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்கள் வழங்க மறுத்து வந்தனர்.

இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியளிக்க முன்வரச் செய்வதில் முதல் தடவையாக அதிகாரிகள் வெற்றியீட்டியதாக வழக்குத் தொடுநர் தரப்பு சட்டத்தரணி, ரீல் கார்மி ஜோன்ஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .