-எஸ்.எம்.மும்தாஜ்
15 வயது சிறுமியை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியதாகச் சொல்லப்படும் 19 வயது இளைஞன் ஒருவனை நேற்று கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராச்சிக்கட்டு கொட்டகே எனும் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியுடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்த இளைஞனே இக்குற்றத்தைப் புரிந்து கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
இவ்வாறு சிறுமியுடன் காதல் தொடர்பினைப் பேணி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி குறித்த இளைஞன் சிறுமியைக் கடத்திச் சென்று தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்து சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன் அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இவ்விருவரும் கணவன் - மனைவியாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த 15 வருடங்களும் 9 மாதங்களும் கொண்ட சிறுமி இரண்டு மாதக் கர்ப்பிணி என்ற விடயம் தெரியவந்ததையடுத்தே இச்சம்பவம் சிலாபம் பொலிஸாருக்கு சிறுமியின் தாயினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்ப்பிணியான சிறுமி தற்சயம் வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.