2025 ஜூலை 16, புதன்கிழமை

கத்திக்குத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மீள்குடியேற்றக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு இடம்பெற்ற கத்திக் குத்தில் கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான ராகதேவன் குமாரன் (வயது 37) என்பவர் மரணமடைந்ததாக  முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  கூறினர்;.

இக்கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கத்திக்குத்தில் மரணமடைந்த நபர் மதுபோதையில் தனது வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.  இச்சண்டையை பார்க்க  வந்த அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடனும்; மதுபோதையிலிருந்தவர்;; வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபோதையிலிருந்தவர்; அப்பெண்ணை தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.  இதனால் அப்பெண்ணின் கையில் காயம் ஏற்பட்டது.


இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இப்பெண் தனது மகனிடம் இது தொடர்பில் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மகன், தனது  தாயை காயப்படுத்திய அந்நபரின் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இவர்களின் வாக்குவாதத்தைக் கண்ட  கிராம மக்கள் அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தியதுடன், அங்கிருந்து  செல்லுமாறு அந்த மகனிடம் கூறினர்.

பின்னர் அந்த இடத்தை விட்டுச் சென்ற மகன்,  அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்ற  பின்னர் மீண்டும் மதுபோதையிலிருந்தவரின் வீட்டுக்கு வந்து, மதுபோதையிலிருந்தவர் மீது கத்திக்குத்தை மேற்கொண்டார்.

இதன்போது, மதுபோதையிலிருந்தவரை காப்பாற்ற முற்பட்ட  இளைஞர் ஒருவரையும் கத்தியால் அவர் குத்தியுள்ளார்.  கத்திக்குத்துக்கு உள்ளான மதுபோதையிலிருந்தவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது மரணமடைந்துவிட்டார்.

இக்கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இளைஞர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கத்திக்குத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .