2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மஞ்சு தவழும் மாத்தளையில்

Editorial   / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜயகுமார் ஷாண்

இலங்காபுரியில் மத்திய ஸ்தானத்தில் சைவமும் தமிழும் தளைத்தோங்க முன்நிற்கும் மாத்தளை மாநகரப் பகுதியில், உருவத்திருமேனி கொண்டு திவ்ய சிம்மாசனத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு இன்று (17) வியாழக்கிழமை இரதோற்சவம் நடைபெறுகிறது. அத்துடன், சனிக்கிழமை  (19) காலை தீர்தோற்சவமும் இரவு துவஜ அவரோகனமும் (கொடியிறக்கம்) நடக்க திருவருள் கூடியிருக்கிறது.

கோவில் அமைவிடம்

இயற்கை எழில் தவழ்ந்து விளையாடும் மத்திய மலைநாட்டில், கண்டியிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் மூவின மக்களும் வாழும் மாத்தளை மாநகரின் மத்தியில், ஆகாயத்தை எட்டிப்பிடிக்கும் வண்ணம் தென்னிந்திய கலைப்பாணியில், சிற்ப வேலைப்பாடுகளுடன் கம்பீரத் தோற்றத்தோடு, 108 அடியில் நிமிர்ந்த நடையில் இராஜகோபுரத்துடன் ஸ்ரீ  முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

கோவிலும் வரலாறும்

இலங்கை திருநாட்டில் சைவம் தளைத்தோங்கும் வகையில், தன்னிகரில்லாக் கோவிலாகத் திகழும் கோவில்களில், மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலும் ஒன்றாகும். பஞ்ச இரதங்களைக் கொண்டுள்ள ஒரே ஒரு கோவில் இதுவாகும்.இதுவே, இலங்கையின் மிக உயரமாக 108 அடிகள் இராஜகோபுரத்தைக் கொண்ட கோவிலாகும்.

 இக்கோவிலில் ஆரம்ப காலத்தில் பூஜைகள் மட்டுமே இடம்பெற்று வந்துள்ளன. பின்னர் படிப்படியாக திருவிழாக்களும் சப்பறத்தேர் எடுக்கும் வழக்கமும் இருந்தது. 1934ஆம் ஆண்டு சப்பறத்தை மாற்றி, விநாயகருக்கும் சிவனம்பாளுக்கும் முருகனுக்கும் இரதோற்சவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

1955ஆம் ஆண்டளவில் இராஜகோபுரம் உட்பட பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் உதவியுடன் கோவிலின் மகா மண்டபம், முருகன் கோவில் வசந்த மண்டபம், விஷ்னு கோவில், நாயன்மார் கோவில், மீனாட்சி சிவன் ஆகிய  கோவில்கள் உருவாக்கப்பட்டன.

ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு சந்தன மரத்தில் சித்திரதேர் செய்யப்பட்டு 1974 ஆம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.

1983ஆம் ஆண்டு, இனக்கலவரத்தின் போது சில விசமிகளால் சித்திரத்தேர் உட்பட அனைத்து தேர்களும் எரியூட்டப்பட்டன. 1992ஆம் ஆண்டளவில் புதிய சித்திரத் தேரையும் ஏனைய தேர்களையும் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இக்கோவிலில் அமைந்துள்ள 108 அடி உயரமுள்ள இராஜகோபுரம், இந்துக்களின் ஒற்றுமையையும் திருப்பணியின் வளர்ச்சியையும் காட்டி நிற்கின்றது. 

மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம்

கருவறையில் திவ்ய சிம்மாசனத்தில் அம்பாள் அமர்ந்து நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள். தீர்த்தமாக கோவில் தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டுள்ளது.கோவிலின் தலவிருட்சம், பல வருடங்களாக கோவிலுக்குள்ளே மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

கோவிலில் பல்வேறு திருவிழாக்கள்  நடைபெற்று, இந்து சமயத்தின் பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் தத்துவங்களையும் பேணிப்பாதுகாத்து வருகின்றது. அந்தவகையில், ஆடிப்பெருந்திருவிழா, தைமாத பிரம்மோற்சவம், மாசிமகம், நவராத்திரி, பௌர்ணமி செவ்வாய் என்பன மிக விசேடமாகவும் மகாசிவராத்திரி, குடமுழுக்கு பூஜைகள், விளக்கு பூஜைகள், ஐயப்ப பூஜைகள் என்பனவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன.  அத்தோடு, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற விசேட தினங்களில், அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெறுகின்றன. இக்காலங்களில் பக்தர்களின் கூட்டம் கடலென (தமிழ், சிங்களம்) திரண்டு, அம்பாளின் அருளாசிக்கு அலைமோதுவது விசேட அம்சமாகும்.

கோவிலின் சமூகப்பணி

இக்கோவிலின் ஊடாக இன்னோரன்ன சமூகப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் மூலம், பிரதேச வாழ் மக்கள், அபிவிருத்தி காண்பது வெட்டவௌிச்சமாகும். அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்  அறநெறி வகுப்புகள் மூலம்,  மாணவர்களுக்கு இந்து  தர்மம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள், கலைத்துறையை மேம்படுத்துவதற்காக கலைப்போட்டிகளை நடத்துதல், வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

கிரியாகால நிகழ்வுகள்

2022.01.26 கொடியேற்றம் நடைபெற்றது.

2022.02.16 முற்பகல் 10 மணிக்கு ஸ்ரீ சிவனடியார் திருவிழாவும் வசந்த மண்டப பூஜையும் அன்றிரவு திருச்சூரக திருவேட்டை திருவிழாவும் நடைபெறும்.

2022.02.17 காலை 8 மணிக்கு இரதோற்சவ வசந்த மண்டப பூஜை நடைபெறும்

2022.02 18 மாலை 7 மணிக்கு கற்பூர திருவிழா நடைபெறும்.

2022.02.19 காலை 8 மணிக்கு பாலாபிஷேகத்தினை தொடர்ந்து காலை 10 மணிக்கு தீரத்தோற்சவமும் மாலை 7 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும்.

2022.02.20 முற்பகல் 11 மணிக்கு சண்டேஸ்வரி உற்சவமும் மாலை ஆறு மணிக்கு பூங்காவன உற்சவமும் நடைபெறும்.

2022.02.22 இரவு வைரவர் பூஜை நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X