2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பல இலட்சம் பெறுமதியான எரிபொருட்கள் மீட்பு (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றின் களஞ்சியசாலையில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை டீசல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் நேற்று (07) மாலை மீட்டுள்ளனர்.

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வழிகாட்டலில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த களஞ்சியசாலையில் 22 பீப்பாய்களில் (Barrels) மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4,620 லீட்டர் (46,20,000 மி.லீ) டீசல் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட எரிபொருளின் மொத்தப் பெறுமதி 17 இலட்சத்து 64,840 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் தொடர்பாக, குறித்த களஞ்சியசாலையின் மேற்பார்வையாளராகக் கடமையாற்றிய 39 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மற்றும் அம்பாறை பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் நெறிப்படுத்தலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உப பொலிஸ் பரிசோதகர் முஸ்தபா அனுர குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் மற்றும் மீட்கப்பட்ட எரிபொருள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .