2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

’ மாகாண சபைகளை ஒழிக்கவே முடியாது’

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா சீறினால் சரத் அடங்குவார் என்கிறது ஐ.ம.ச

மாகாண சபை முறைமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்குத்  தீர்வு தரக்கூடிய சரியான முறையெனத் தெரிவித்த முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திர, மாகாண சபை முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவால் முடியாது என்றார்.

இலங்கைக்குள் மாகாண சபை முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறிக்கொண்டாலும் இந்தியா ஒரு முறை சீற்றமடைந்தால், இவர்கள் அடங்கிடுவர் என்றார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

அரசாங்கம், 13ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு, மாகாண சபை​ முறையை முற்றாகத் து​டைத்தெறிய முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டிருந்தாலும்,  இந்தியாவைப் பகைத்துக்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது என்றும் தெரிவித்தார். 

இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே 13ஆவது திருத்தத்தை அமல்படுத்த வேண்டுமென்ற இணக்கப்பாடு இந்தியாவுடன் எட்டப்பட்டதெனத் தெரிவித்த அவர், மாகாண சபைகள் அவசியமில்லை எனக் கூறும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர போன்றவர்கள், நாட்டில் தேசிய பிரச்சினை இன்றும் முடிவுக்கு வரவில்லை என்பதை மறந்துவிட்டனர் என்றார்.   

எவ்வாறாயினும், மக்கள் மத்தியில் பிரச்சினையொன்று நிரந்தரமாக​வே இருக்க வேண்டுமென்ற நோக்கம், நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உள்ளதெனவும், அவ்வாறான பிரச்சினைகள் நீடித்தால் மாத்திரமே  அவர்களால் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் சாடினார்.

எவ்வாறாயினும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியமென்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளதெனத் தெரிவித்த அவர்,  அதனூடாக நாட்டின் சகல மாகாணங்களுக்கும் ஒரே அளவிலான அதிகாரப் பகிர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். 

1980களில் ஏற்பட்ட இனக்கலவரங்களைப் போன்று, புதிய கலவரங்களைத் தோற்றுவிக்கவே மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவெனச் சாடிய அவர், மாகாண சபைகள் முறைமை ‘வெள்ளை யானை’ ஆவதற்கு அதன் பணியாளர்களும் அதற்குத் தெரிவான உறுப்பினர்களுமே காரணமென்றும் சாடினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .