2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுனாமியினால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு 110 மில்லியன் ரூபா நிதியுதவி

Super User   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 110 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக தலா 70 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது - இதற்கான காசோலையினை பயனாளிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த பயனாளிகள் தமக்கான வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக, சாய்ந்தமருது கரைவாகு வட்டை பகுதியில் அரசாங்கம் காணிகளை வழங்கியுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

வீடுகளை நிர்மாணிப்பதற்கென மொத்தமாக 550,000 ரூபாவினையும் நான்கு கட்டங்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில், மேற்படி 200 பயனாளிகளுக்கும்  முதற்கட்டமாக தலா 70 ஆயிரம் ரூபாவினையும், இரண்டாம் கட்டமாக 02 லட்சம் ரூபாவினையும், மூன்றாம் கட்டமாக 02 லட்சம் ரூபாவினையும், மிகுதித் தொகையான 80 ஆயிரம் ரூபாவினை 04 ஆம் கட்டத்திலும் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீடுகள் - அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ஆகியவைகளினூடாகவே நிர்மாணிக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் சலீம் சுட்டிக்காட்டினார்.

சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 511 பேருக்கு – ஏற்கனவே வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .