2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

3ஆவது தடவையாகவும் விதைக்கும் நிலை

Niroshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 20ஆம் திகதி முதல் தொடரும் அடைமழையால் 3ஆவது தடவையாகவும் விவசாயிகள் விதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முதலாவது தடவை விதைத்து சில நாட்களில் அடைமழை பெய்து நெல் முளைக்கும் திறனை தடுத்தது. பின்னர் இரண்டாவது தடவையாக விதைத்து மீண்டும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்டு 3ஆவது தடவையாகவும் விதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கொத்துமாரி, விளான்காட்டான்வெட்டி, சாம்பன்முன்மாரி, கருங்கொடித்தீவு கீழ் மற்றும் மேல் உள்ளிட்ட 2500இற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கருங்கொடித்தீவு விவசாய குழுத்தலைவர் த.கைலாயப்பிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை, பனங்காடு தில்லை ஆற்றை சூழ்ந்துள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் விளக்கினார்.

பெய்கின்ற மழை நீர் ஒருபுறமிருக்க வெள்ளம் வடிந்தோடும் பிரதான பாதையான  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பனங்காட்டுப்பாலத்தின் கீழாக படர்ந்து காணப்படும் சல்வீனியாவும் வெள்ளம் பெருகுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.

மேலும், இவற்றை அகற்றுவதற்கான கனரக வாகனங்கள் நீர்ப்பாசன திணைக்களத்தில் இருந்து சில தினங்களுக்கு முன் எடுத்துவரப்பட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோதும்,  இடைநிறுத்தப்பட்டு மீண்டும் உரிய வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டமைக்கான காரணம் புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வடிச்சல் பாதை சீரமைக்கப்படாமையால் நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3ஆவது தடவையாகவும் விதைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, சம்மந்தப்படட அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தி விவசாயிகளை காப்பாற்ற முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ரி.மயூரன் ,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சல்வீனியாவை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .