2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தனும் ஹக்கீமும் மாத்திரமே இருப்பார்கள்'

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

“நாட்டின் இனப் பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன் ஐயாவும் தலைவர் ரவூப் ஹக்கீமும் மாத்திரமே இருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக அறிவித்துள்ளார்” என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் 'கிராமத்துக்கு தொழில்நுட்பம்' எனும் தொனிப்பொருளின் கீழ் சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது விதாதா வள நிலைய புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை(04) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்,

“கல்முனை பிரதேசத்தில் கைத்தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை உணர முடிகிறது. எமது பிரதேச தரமான நெசவு உற்பத்தி பொருட்களான சாரம்இ சாரிகள் என்பன அனைவராலும் விரும்பி கொள்வனவு செய்யக் கூடியளவு உள்ளது. இந்தியாவின் உற்பத்தி பொருட்களுக்கு நிகராக எமது கல்முனை பிரதேச நெசவு உற்பத்தி பொருட்கள் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் தலைநகரில் பல காட்சியறைகளும் உள்ளன.

இந்தியாவின் பெங்களுர், ஹைதராபாட் ,சென்னை போன்ற நகரகங்கள் தொழில்நுட்பத் துறையில் பிரகாசிக்கின்றன. அங்குள்ள இளைஞர்கள் தொழில்நுட்ப கல்வியை கற்று மாதாந்தம் கூடுதலான வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்த தொழில்நுட்ப வசதிகளை எமது நாட்டிலும் ஏற்படுத்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருகிறார். அதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன் மூலம் பிரதமரின் தேர்தல் வாக்குறுதியான 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் எமது நாட்டில் உருவாகப்படவுள்ளன.

இதில் எமது இளைஞர், யுவதிகளும் உள்வாங்கப்படவுள்ளனர். அதற்கான ஆயத்தங்களுடன் உரிய கற்கை நெறிகளை மேற்கொண்டு எமது இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும்” என்றார்.

“நாட்டின் அரசியல் அமைப்பு மாற்றம் சம்பந்தமாக இன்று பேசப்படுகின்றது. இதில் முஸ்லிம் சமூகம் பாதிக்காதவாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் கட்சியின் செயற்பாட்டை இல்லாமல் செய்வதற்கு பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை நாம் நன்கு புரிந்து வைத்துள்ளோம். இச்சதிகளுக்கு முகம் கொடுத்து முறியடிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஆனால் மக்கள் குழம்பிவிடாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X