2025 மே 19, திங்கட்கிழமை

'சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமாயின், முஸ்லிம்கள் அகதிகளாக வாழ வேண்டியேற்படும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமாயின், அங்குள்ள முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

இது தொடர்பில்   திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில்;, 'தமிழருக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே அரசியல் யாப்பு மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் கேள்விக்குறியாக உள்ளது.

வடக்கு மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன தமிழருக்கு எவ்வாறான தீர்வு கிடைக்க வேண்டுமென்று தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளன.  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள தீர்வுத்திட்ட வரைவு தமிழருக்கான தீர்வை உறுதியாகப் பறைசாற்றியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டித் தீர்வை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதில் தமிழ் பேசும் இனக்குழுமமென்று முஸ்லிம்கள் கணிக்கப்பட்டுள்ளனர்'; என்றார்.

'இருப்பினும், எந்தவொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம்களுக்கான தீர்வு இவ்வாறு அமைய வேண்டுமெனக் கோரி இதுவரையில் எதையும்  சமர்ப்பிக்கவில்லை. தமிழ்ச் சமூகத்தின் சுயநிர்ணயத்தை உறுதிப்படுத்துவதற்காக அதன் தலைமைகள் செயற்படுகின்றன. தமது சுயநிர்ணயத்துக்;காக தமிழர்கள் முழுமூச்சாக நிற்கிறார்கள்.  .  

முஸ்லிம்கள் முதலில் தாமும் ஒரு தேசிய இனமென்ற ரீதியில் தேசியத்தையும் சுயநிர்ணயத்தையும் வலியுறுத்த வேண்டும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறுவது போன்று நாம் ஒரு இனக்குழுமம் இல்லை. நாம் தமிழருக்கு நிகரான தேசிய இனம். எமக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்று உரத்துக் கூறவேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X