2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'புகைத்தலால் நாளாந்தம் 60 பேர் உயிரிழப்பு'

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

புகைத்தல் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 60 பேர் உயிரிழப்பதுடன்,  இவர்களில் 60 சதவீதமானனோருக்கு புற்றுநோய் காணப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரச் சேவைக்காக அரசாங்கம் வருடத்துக்கு 4,500 மில்லியன் ரூபாவை செலவு செய்வதாகவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு நேற்றுப் புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட சுகாதார மேம்பாட்டு விழிப்புணர்வுச் செயலமர்வின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் உரையாற்றுகையில், 'புகைத்தல் காரணமாக பணம் விரயமாக்கப்படுவதுடன், நோய்த் தாக்கத்துக்கும் உள்ளாகும் நிலைமை உள்ளது. இலங்கையில் மட்டும் வருடத்துக்கு சுமார் 21,000 பேர்  புகைத்தல் காரணமாக உயிரிழக்கும் நிலைமை உள்ளது' என்றார்.

'இது இவ்வாறிருக்க தவறான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி செய்யாமை உள்ளிட்டவை காரணமாக தொற்றாத நோய்களினால்  அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் 65 சதவீதமானோர் தொற்றாத நோயத் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளமையை சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையிலிருந்து காணமுடிகின்றது.

நீரிழிவு, புற்றுநோய், வாதநோய், இருதய நோய், சுவாச நோய், சிறுநீரக நோய் என்பன தொற்றா நோய்களாக உள்ளன. இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் சுகாதார அமைச்சு அதிக நிதியை செலவு செய்து வருகின்றது' என்றார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X