2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பொறியியல்பீட மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிக்கவில்லை'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல்.மப்றூக்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், மாணவர்கள் எவரும் வகுப்புகளுக்கு சமூகம் தரவில்லை என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் கையொப்பமிட்டு, கடந்த மாதம் 24ஆம் திகதி பொறியியல்பீடத்தின் சகல மாணவர்களையும் வழமையான வகுப்பு நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்து, ஒவ்வொரு மாணவருக்கும் கடிதங்களை அனுப்பிவைத்திருந்ததாகவும் பதிவாளர் சத்தார் சுட்டிக்காட்டினார்.

பொறியியல்பீட பீடாதிபதி, மாணவர்களுக்கு அனுப்பி வைத்த அந்தக் கடிதத்தில், '2012ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடமானது, முதலாம் ஆண்டு கற்கை நெறிகளுக்கான ஆய்வுகூட மற்றும் நூலக வசதிகள் முழுவதையும் விசேட கற்கை நெறிகளுக்கான ஆய்வுகூட மற்றும் நூலக வசதிகளில் இரண்டாம் வருடத்துக்குரிய பெரும்பாலானவற்றினையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் மற்றைய இரண்டு வருடங்களுக்குரிய ஆய்வுகூட மற்றும் நூலக வசதிகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, 'சில மறைமுக சக்திகளின் பின் தூண்டல்களினால் முன்வைக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்துக்கு எதிரான கருத்துக்களால், பல்கலைக்கழகத்துக்காக இரவு, பகல் பாராமல் பாடுபடுகின்ற ஊழியர்களின் மனங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நடந்து விடவில்லை.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மேற்கண்டவாறான நடவடிக்கைகளுக்கு மத்தியில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும், உயர் கல்வி அமைச்சினதும் உதவியினால் பின்வரும் நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1.    விசேட நடவடிக்கைகள் மூலம், வளர்ச்சி பெற்ற பொறியியல்பீடங்களிலிருந்து விரிவுரையாளர்களை பெற்றுத் தந்து, தொடர்ச்சியாக எமது பீடத்தில் தங்கியிருந்து பணியாற்றச் செய்து, கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து செயற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை.

2.    மூன்றாம், நான்காம் வருட விசேட கற்கை நெறிகளுக்குத் தேவையான உசாத்துணை நூல்களை உடனடியாக கொள்வனவு செய்ய போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை.

3.    ஆய்வுகூட வசதிகளை துரிதமாக விருத்தி செய்ய, மேலதிகமாக 60 மில்லியன் ரூபாய் நிதி உதவியை உடினடியாக அளித்தமை.

4.    முடிவுறும் தறுவாயிலுள்ள நான்கு மாடி ஆய்வுகூட கட்டிடப் பணிகளை, மேலும் துரிதப்படுத்த பணிப்புரை விடுத்துள்ளமை.

எனவே, மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் பல்கலைக்கழகமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் மற்றும் உயர் கல்வி அமைச்சும் விசேட கவனம் செலுத்தி, பொறியியல் பீடத்தினை அபிவிருத்தி செய்து வரும் சூழ்நிலையில், வதந்திகளை நம்பி, மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையினை மேலும் காலம் தாழ்த்தாது, வகுப்பு பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்கு டிசம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் திரும்புமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

இருந்தபோதிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவர்கள் எவரும் இதுவரை தமது வகுப்புகளுக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில், பொறியியல் பீடத்துக்கான விரிவுரையாளர்கள், கடமைக்குச் சமூகமளித்துள்ளனர் என்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருடத்தில் 92 மாணவர்களும் இரண்டாம் வருடத்தில் 99 மாணவர்களும் மூன்றாம் வருடத்தில் 93 மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X