2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கைவிடப்பட்ட நிலையிலுள்ள வீதிப் புனரமைப்பு நடவடிக்கை

Super User   / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தின்போது அட்டாளைச்சேனை நாவலடி வீதியினை கொங்றீட் வீதியாக அமைத்துத் தருவதாகக் கூறி, அந்தப் பாதையிலிருந்த கிறவல் மற்றும் மண் ஆகியவற்றை சுமார் ஒன்றரை அடி ஆழத்துக்கு தோண்டியெடுத்த பின்னர், சம்பந்தப்பட்டோர் தற்போது குறித்த வீதியை பராமுகமாக விட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கினறனர்.

உறுதியளிக்கப்பட்டதற்கு இணங்க தமது வீதியினை கொங்றீட் வீதியாக அமைக்க வேண்டும், அல்லது பழைய நிலையில் தமது வீதியினை செப்பனிட்டுத் தரவேண்டும் என சம்பந்தப்பட்டோரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு சமாந்தரமாகவுள்ள நாவலடி வீதியினை கொங்றீட் வீதியாக அமைப்பதாகக் கூறி, கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தின் போது 'வீதிவிழா'வொன்று கொண்டாடப்பட்டதாகவும் இவ்விழாவில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் இந்த வீதியிலுள்ள கிறவல் மற்றும் மண் ஆகியவை சுமார் ஒன்றரை அடி ஆழத்துக்குத் தோண்டியெடுக்கப்பட்டது. ஆனாலும், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வீதி – எதுவித புனரமைப்புகளுமின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

மேற்படி நாவலடி வீதி இவ்வாறு மண் தோட்டப்பட்டு பள்ளமாக்கப்பட்டுள்ளதால், அண்மையில் பெய்த மழையின் காரணமாக வீதியின் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

மேலும், வீதியிலுள்ள மண் தோண்டியெடுக்கப்பட்டதால் அதனுள் புதைந்தவாறு வைக்கப்பட்டிருந்த நீர் வழங்கல் அதிகாரசபைக்குச் சொந்தமான கொங்றீட் பெட்டிகள் - தற்போது வீதி மட்டத்தை விடவும் உயர்ந்துள்ளதால், பயணிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்வீதியின் சூழலில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கிழக்கிலங்கை அரபிக் கல்லூரி மற்றும் தேசிய பாடசாலை உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளமையும், இவற்றோடு சம்பந்தப்பட்ட பலர் - இந்த வீதியால் நாளாந்தம் பயணம் செய்வதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க, மேற்படி வீதியில் தோண்டியெடுக்கப்பட்ட பெருமளவான கிரவல் மற்றும் மண் ஆகியவை சில தனியாருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதமானதொரு செயற்பாடு என்றும்  பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது விடயத்தில் உரியவர்கள் உடனடிக் கவனம் செலுத்தி, மேற்படி பாதை தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .