2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஆர்ப்பாட்டக்காரர்களின் கூற்றை நிராகரிக்கிறார் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

2007ஆம் ஆண்டுக்குப்பின் நியமனம் வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இடமாற்றம் என்ற சொல்லை தவறூகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்முனை வலயத்தில் உள்ள தேவைக்கு அதிகமான முறையில் மேலதிகமாக உள்ள  ஆசிரியர்களைத்தான் இடமாற்றம் செய்யப்போகின்றோம்' என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்குப் பின்  ஆசிரியர்களின் இடமாற்றத்தை  எதிர்த்து கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குற்றிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'குறித்த பாடத்திற்கு 50 பேர் கல்முனை வலயத்திற்குத் தேவை என்றால் 51ஆவதாக உள்ளவர் மேலதிகம்தானே அவரை ஏனைய  தேவையுள்ள  வலயத்திற்கு மாற்றுவதால் எப்படி கல்முனை  வலயத்தின்  கல்வி பாதிப்படையும்?

அதேவேளையில் அந்த பாடத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்குமானால் அதற்குரிய ஆசிரியர்களையும் வழங்குவோம். இதில் 2007ஆம் ஆண்டு என்பதை விட கடைசியாக நியமனம் பெற்று வந்தவர்களுள் மேலதிகமாக உள்ள இறுதியானவர் என்பது பொருத்தமாகும்' என அவர் குறிப்பிட்டார்.

இந்த இடமாற்றமானது இரண்டு வகையாக நடைபெறுகிறது. ஒன்று வலயத்திற்குள் பாடரீதியாகவும் மற்றது வலயங்களின்  தேவையையும் மேலதிகமாக உள்ளவர்களையும் அடிப்படையாகக் கொண்டும் முழு கிழக்கு மாகாணத்திற்குமான இடமற்றமே அன்றி கல்முனை கல்வி வலயத்திற்காக மட்டுமல்ல.

இந்த இடமாற்றமானது தனியே தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கானதும் அல்ல. இது கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வலயங்களுக்கும் உரியதாகும். குறித்த பாடத்திற்கு ஆசிரியர்களே இல்லாமல் அப்பாடத்தை கற்க முடியாமல் கஷ்ட்டப்படும் மாணவர்கள் உள்ள பாடசாலைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில்தான் மாற்றம் செய்யப்படுவார்கள்.

அம்பாறை வலயத்திற்கு ஒரு விதி, கல்முனை வலயத்திற்கு ஒரு விதி என்பதும் பொய். கிழக்கு மாகாணத்தில் எங்கு தேவையுள்ளதோ அங்கு மேலதிகமாக உள்ளவர்களை மாற்றுவோம். இதில் கட்டாயம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ் மொழிப் பாடசாலைக்கு சிங்கள மொழியினரை நியமிக்க முடியாது. இதன் அடிப்படையில் அவர்களை அவர்களின் தேவைக்கு ஏற்றவாறுதான் மாற்ற முடியும். இது தமிழ் மொழிக்கும் பொருத்தமானதாகும்.

கிழக்கு மாகாணத்தில் மேலதிகமாக உள்ள மொத்த ஆசிரியர்களின் தொகை 69 ஆகும். ஆனால் கல்முனை வலயத்தில் 300க்கு, சம்மாந்துறை வலயத்தில் 260க்கும், அக்கரைப்பற்று வலயத்தில் 70, பட்டிருப்பு வலயத்தில் 100, திருகோணமலை வலயத்தில் 60 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். இவர்களைத்தான் தேவைப்படும் வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப் போகிறோம். இதை சரியாக புரியாதவர்கள் இவ்வாறு கூறுவதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

கடந்த 2010ஆம் ஆண்டு புல்மோட்டை, ஈச்சிலம்பற்று, கிண்ணியா, முல்லிப்போத்தானை, வாகரை மற்றும் மட்டக்களப்பிலுள்ள படுவான்கரைப் பிரதேச மக்கள் ஆசிரியர்பற்றாக் குறையை நிவர்த்தி செய்து தருமாரு கோரி 32 முறை போராட்டங்களை நடத்தியதுடன் இறுதியாக பாடசாலைகளை மூடி தொடர்ந்தும் பத்து நாட்களாக போராட்டங்களை நடாத்தினர்.

அவர்களுக்கு 2011ஆம் ஆண்டில் ஆசிரியரிகளை நியமித்து தருவதாக வாக்களித்தோம் அதன் பின்தான் போராட்டங்களை  கைவிட்டனர். இவர்கள் கூறுவது போன்று இந்த இடமாற்றத்தை நிறுத்தினால் அங்கு அவர்கள் என்ன செய்வார்கள்?' என அவர் கேள்வி எழுப்பினார்.


You May Also Like

  Comments - 0

  • kalamkalmunaikalamk Tuesday, 26 April 2011 03:16 AM

    சரியான நேரத்தில் சரியான நேர்கானல். முதலில் ஆர்ப்பாட்ட செய்தி பின் இது..ஊடகம் சரியாகத்தான் உள்ளது. வாழ்க தமிழ் மிரர் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .