2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்கள் ஓர் வித்தியாசமான போராட்டவாதிகள்: மாவட்ட நீதிபதி அப்துல்லா

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஊடகவியலாளர்கள் ஓர் வித்தியாசமான போராட்டவாதிகள். அவர்கள் பேனா முனை  போராட்டவாதிகள். பேனா முனை போராட்டங்கள் அழிந்ததாக எந்தவொரு சரித்திரமும் கிடையாது. ஆனால், ஏனைய போராட்டங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லா தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கு 'உண்மை' என்பது அழகாகும். உண்மை என்கிற தாரக மந்திரத்தை  பின்பற்றாமல் ஊடகவியலாளர்கள் நடப்பார்களாயின் மக்கள் மத்தியில் அவர்களின் கருத்து எடுபடாமல் போய்விடும். ஆகவே, ஊடகவியலாளர்கள் உண்மையானவர்களாக இருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காலம் சென்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களான கே.எம்.தர்மலிங்கம் மற்றும் ஏ.எம்.அலிகான் ஆகியோருக்கான இரங்கற் கூட்டம் நேற்று சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூhயில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த மேற்படி இரங்கற் கூட்டம், சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ். இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னிலை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மாவட்ட நீதிபதி அப்துல்லா மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஓவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விடயம் அழகாக இருக்கும். மனிதனை எடுத்துக் கொண்டால் அதில் 'மனிதம்' என்கிற விடயம் அழகாக இருக்கும். அதே போன்று ஊடகவியலாளர்களுக்கு 'உண்மை' என்பது அழகாகும்.

உண்மை என்கிற தாரக மந்திரத்தை பின்பற்றாமல் ஊடகவியலாளர்கள் நடப்பார்களாயின் மக்கள் மத்தியில் அவர்களின் கருத்து எடுபடாமல் போய்விடும். ஆகவே, ஊடகவியலாளர்கள் உண்மையானவர்களாக இருத்தல் வேண்டும்.

ஊடகவியலாளர்கள் என்போர் வித்தியாசமான போராட்டவாதிகள். அவர்கள் பேனாமுனை  போராட்டவாதிகள். பேனாமுனை போராட்டங்கள் அழிந்ததாக எந்தவொரு சரித்திரமும் கிடையாது. ஆனால், ஏனைய போராட்டங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, ஆயுதப் போரட்ட இயக்கங்கள் சில தசாப்தங்கள் போராட்டத்தில் ஈடுபடும். பின்னர் அவை அழிந்து போகும். அந்த இயக்கங்களை ஆக கூடியது சில தசாப்தங்கள் நாம் நினைவு கூருவோம். ஆனால் பேனாமுனைப் போராட்டவாதிகளின் போராடட்டமானது நூற்றாண்டுகளாக நினைவு கூரப்படும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பேனா முனையால் போராடிய ஊடகவாதிகளை இன்று வரை நாம் நினைவில் வைத்து போற்றிக் கொண்டிருப்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.

அந்த வகையில் மறைந்த ஊடகவிலயலாளர்களான கே.எம். தர்மலிங்கம், ஏ.எம். அலிகான் ஆகிய இருவரும் பேனாமுனை போராட்டவாதிகள் எனும் வகைக்குள் அடங்குகின்றனர். இவர்களை இன்று நாம் நினைவு கூருவது போன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் இவர்கள் நினைவு கூரப்படுவார்கள்.

இவர்களை ஏன் நாம் நினைவு கூருகின்றோம் என்பது தான் இங்கு முக்கியமான விடயமாகும். அதாவது, கடந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக வைத்துக் கொண்டு, நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நமது செயல்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் மறைந்த ஊடகவியலாளர் தர்மலிங்கம் ஆங்கில எழுத்தில் பரிட்சயம் பெற்றவர். ஆங்கிலம் என்பது உலகுக்கு முக்கியமானது. நமது செய்திகளை உலகமயப்படுத்துவதற்கு ஆங்கிலம் அவசியமானதாகும் என்று தனது எழுத்துக்களால் எடுத்துக் கூறியவர் தான் சகோதரர் தர்மலிங்கம.



ஆகவே, தர்மலிங்கம் அவர்களை ஒரு பாடமாக கருதி, அவரிடமிருந்தது போன்ற ஆங்கில மொழித் திறனை நாமும் அடைய முயற்சிக்க வேண்டும். அவரின் ஊடகச் செயற்பாடுகளை நாம் எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று மர்ஹும் அலிக்கான் அவர்கள் மொழியை கவிதை வடிவில் எழுதக் கூடியதொரு ஆற்றல் மிக்க எழுத்தாளர். அவரின் மொழி அழகில் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன.

எல்லா மொழிகளிலும் தாய் மொழியே அழகானதாகும். மறைந்த ஊடகவியலாளர் தர்மலிங்கம் மற்றும் அலிக்கான் ஆகிய இருவரும் இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அதனால்தான், அந்த இருவருக்குமான இரங்கற் கூட்டத்தில் நாம் தமிழில் உரையாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் ஓர் அழகிய மொழியாகும். மொழியை குறைபாடுகளுடன் கையாளக் கூடாது. மொழியை எப்போதும் நாம் வளமுடன் கையாள வேண்டும்.

தமிழ் - முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஒரே மேடையில் இரங்கற் கூட்டமொன்று நிகழ்வதென்பது சிறந்ததொரு முன்மாதிரியாகும். மொழியால் இணைந்து இந்த இரங்கற் கூட்டத்தில் தமிழ் - முஸ்லிம் இனத்தவர்களாகிய நாம், ஒன்றுபட்டிருப்பது போல், ஏனைய விடயங்களிலும் ஒன்றுபட வேண்டும். தமிழ் மொழியால் ஒன்றுபட்டுள்ள இந்த இரண்டு சமூகங்களும் நமது தாய் மொழியையும், இனங்களுக்கிடையிலான உறவினையும் வளர்த்தெடுக்க வேண்டும்' என்றார். 

இந்த இரங்கற் கூட்டத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகன், தினக்குரல் பிரதம ஆசிரியர் வி. தனபாலசிங்கம், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன், வீரகேசரி பத்திரிகையின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.சிவராசா, வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு முகாமையாளர் எம்.செந்தில்நாதன், தினக்குரல் பத்திரிகையாளர் எம்.ஏ. நிலாம், கவிஞர்களான மு.சடாட்சரன், கலாபூசண் ஆசுகவி அன்புடீன் ஆகியோர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .