2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளில் பலர் அத்துமீறி குடியேற்றம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து, சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்காக கல்முனை இறைவெளிக் கண்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள சில வீடுகளில் பொதுமக்கள் சிலர் அத்துமீறி குடியேறியுள்ளனர்.

சுனாமியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த தமக்கு இறைவெளிக் கண்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்படும் என அதிகாரிகளால் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்த போதும் - கடந்த வாரம் அந்த வீடுகளில் சில - ரகசியமாக சிலருக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டமையினாலேயே மிகுதியாகவுள்ள வீடுகளில் - தாம் இவ்வாறு அத்துமீறிக் குடியேறியுள்ளதாக அம்மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாகத் தெரியவருவதாவது, கல்முனைப் பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் திறைசேரியிலிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து இறைவெளிக்கண்டத்தில் 456 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. தொடர் மாடிகளாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுக் திட்டத்தில், தலா 12 வீடுகளைக் கொண்ட 38 வீட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்படி வீட்டுத் திட்டத்திலுள்ள 427 வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே கடந்த வருடம் வழங்கப்பட்டன. மிகுதியாக உள்ள 29 வீடுகளையும் வழங்கும் முயற்சியில் சில மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவற்றினைப் பகிர்ந்தளிக்கும் முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

மேற்படி 29 வீடுகளையும் பெறுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டோரின் பட்டியலில் - சுனாமியால் பாதிக்கப்படாதோர், பாதிக்கப்பட்டு ஏற்கனவே வீடுகளைப் பெற்றுக் கொண்டோர் உள்ளிட்ட தகைமையற்ற பலர் உள்ளடக்கப்பட்டிருந்ததாக பொதுமக்களால் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்தே இம்முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த வாரம் மேற்படி 29 வீடுகளில் 07 வீடுகள் பொதுமக்கள் சிலருக்கு - அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக, வீடுகள் கிடைக்காத பொதுமக்கள் கல்முனைப் பிரதேச செயலாளரிடம் சென்று விளக்கம் கேட்டபோது, அவர் முறையான பதிலை வழங்காமல் அம்பாறை மாவட்ட செயலாளரிடம் செல்லுமாறு கூறியதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவிக்கின்றார்

இதேவேளை, மாவட்ட செயலாளரிடம் இது தொடர்பாக தாம் சென்று கேட்டபோது, சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளைப் பெறுவதற்கு கல்முனையில் எவருக்கும் தகுதி இல்லை என தம்மிடம் மாவட்ட செயலாளர் கூறியதாக அப் பெண் மேலும் கூறினார். இந்த நிலையில், கல்முனை இறைவெளிக்கண்டத்திலுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் மீதமாகவுள்ள வீடுகளை நியாயப்படி பாதிக்கப்பட்ட தமக்கு வழங்குமாறு - இங்கு அத்துமீறிக் குடியேறியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0

  • razeek kalmunai Tuesday, 25 October 2011 03:10 AM

    பிரதி முதல்வர் இதில் கவனம் எடுப்பார்களா ? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கிடைக்க ஆவன செய்வார்களா?

    Reply : 0       0

    mbm Tuesday, 25 October 2011 08:46 PM

    சென்ற மாதம் முழுக்க கல்முனையில் வாக்குப்பந்தை எனக்கு போடுங்க என்று கேட்ட எந்த அரசியல்வாதி சிக்ஸ் அடித்து வெல்ல வைக்க போகிறார் என்று இனிதான் பார்க்க போகிறோம். அரச அலுவலகங்களில் 8.15-9.30, 11.00-12.00, 3.00-4.௦௦ மணி நேரம்களுக்குள் வேலை செய்யும் அரச ஊழியர்கள் எப்போது ஒதுக்கப்பட்ட முழுநேரமும் வேலை செய்கிறார்களோ, அன்றுதான் வீடுகளும் கிடைக்கும். ஹலாலான சம்பளமும் கிடைக்கும். முஸ்லிம் ஈமானிய அரசியல்வாதி யாராவது புதிய கல்முனை மாநகர சபைக்குள் இருக்கிறீங்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .