2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பாலமுனை கடற்கரைக்கான உப வீதியினை நிர்மாணிக்க தீர்மானம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 31 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சின்னப் பாலமுனை மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் - கடற்கரைப் பகுதிக்கான உப வீதியினை விரைவில் நிர்மாணித்துக் கொடுப்பதென அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இன்று சபைக் காரியாலத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, உதவித் தவிசாளர் எம்.ஏ.அன்சில் மேற்படி வீதியின்மையால் சின்னப் பாலமுனைப் பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசியதோடு, குறித்த வீதியினை அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அமைத்துக் கொடுப்பதற்கான பிரேரணையொன்றினையும் முன்வைத்தார். மேற்படி பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அட்டாளைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட பகுதி சின்னப்பாலமுனையாகும். இங்குள்ள மீனவர்கள் தாம் கடலில் பிடிக்கும் மீன்களை மொத்த வியாபாரிகளுக்குக் கொடுப்பதற்காக அருகிலுள்ள கடற்கரை வீதிக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. அவ்வாறு தமது மீன்களை கரையிலிருந்து கடற்கரை வீதிக்குக் கொண்டு வருவதற்காக கூடையொன்றுக்கு 750 ரூபாவினை கூலியாக வழங்க வேண்டியுள்ளது. இதனால், இந்த மீனவர்கள் தினமும் பல ஆயிரம் ரூபாவினை இதற்காகச் செலவிட்டு வருகின்றனர்.

எனவே, சின்னப்பாலமுனை கடற்கரை வீதியிலிருந்து மீனவர்களுக்கு மீன் கிடைக்கும் இடம் வரையில் ஒரு கிளை வீதியினை அமைத்துத் தருமாறு சின்னப்பாலமுனை மீனவர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே – அவர்களுக்கான வீதியினை மீனவர்களின் உதவியுடன் அமைத்துக் கொடுப்பதென சபையில் இன்று ஏகமனதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்காக - தனது முயற்சியின் மூலம் யுனெப்ஸ் நிறுவனத்திடமிருந்து வாகனமொன்றைப் பெற்றுத் தந்தமைக்காகவும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள வடிகான்களை மழை காலத்துக்கு முன்னர் துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டமைக்காகவும் அட்டாளைச்சேனைப் பிரதேசசபையின் தவிசாளருக்கு தமது நன்றியினைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எல்.எம்.பரீட் கூறினார்.

மேற்படி அமர்வில், பிரதேசசபை உறுப்பினர்களான, எஸ்.எல்.முனாஸ், ஏ.எல்.அமானுல்லா, என்.எல்.யாசிர் ஐமன், ஏ.எல்.சுபைதீன், ரி.ஆப்தீன் ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


You May Also Like

  Comments - 0

  • Doc - KSA Tuesday, 01 November 2011 12:13 AM

    Good move. Congrats.

    Reply : 0       0

    ullooran Tuesday, 01 November 2011 04:01 AM

    எல்லோரும் ஒன்றுபட்டு இனியாவது இந்த ஊரை அபிவிருத்தி செய்வதற்கு முன்வாருங்கள்.... ....!

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 01 November 2011 05:42 AM

    ஒன்றுபட்டு என்றால் எப்படி பள்ளியை மறைக்குது என்று ஒருவரும் பிரச்சனையே இல்லை என்று ஊர் மக்கள் எது எந்த பக்கம் ஒற்றுமையா நிற்கலாம். சொல்லுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .