2025 ஜூன் 25, புதன்கிழமை

திவி நெகும வேலைத் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளுக்கான பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாமை தொடர்பில் மகஜர

Super User   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

திவி நெகும வேலைத் திட்டத்தின் கீழ், சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ள கறவை மாடுகளை அட்டாளைச்சேனை – ஆலங்குளம் கிராமத்துக்குப் பொறுப்பான கிராம சேவகரும் சமுர்த்தி உத்தியோகத்தரும் குறித்ததொரு கட்சி சார்ந்தோருக்கு மட்டும் பகிர்ந்தளிக்கும் வகையில் பெயர்ப் பட்டியல் தயாரித்து பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் – குறித்த பெயர்ப்பட்டியலை ரத்துச் செய்வதோடு, உண்மையான பயனாளிகளை இனங்கண்டு, அவர்களின் பெயர்களைப் பட்டியலில் உள்ளடக்குவதற்கு உதவி புரியுமாறும் கோரிக்கை விடுக்கும் வகையிலான மகஜர் ஒன்றினை - அக்கிராமத்து மக்களில் சிலர் நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நஸீரிடம் கையளித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலயத்தில் தவிசாளரைச் சந்தித்த பொதுமக்கள் மேற்படி மகஜரினைக் கையளித்தனர். ஆலங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் மக்களுடன் சமூகமளித்திருந்தனர்.

இதன்போது, தவிசாளரிடம் பொதுமக்கள் கூறுகையில்,

'சமுர்த்திக் கொடுப்பனவினைப் பெறுகின்ற வறிய குடும்பங்களுக்கு திவி நெகும திட்டத்தின் கீழ் - கறவை மாடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் குறித்த கறவை மாடுகளைப் பெறுவோரின் பெயர்களைக் கொண்ட பட்டியலொன்றினை கிராம சேவகரும், சமுர்த்தி உத்தியோகத்தரும் தயாரித்து, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

பிரதேச செயலாளரும் அந்தப் பெயர்ப்பட்டியலை அங்கீகரித்துள்ளதுடன், அதை உரிய இடங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், தயாரிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் குறிப்பிட்டதொரு கட்சியினைச் சார்ந்தவர்களாவர். நேர்மையற்ற முறையிலும் - சட்டத்துக்கு விரோதமாகவுமே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவிடயமாக, பிரதேச செயலாளரிடம் இன்று புகார் செய்தோம். அதன்போது பிரதேச செயலாளர் கூறிய பதிலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அதாவது, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலை உரிய இடங்களுக்கு தான் அனுப்பி விட்டதாகவும், அதனால், அடுத்த வருட திவி  நெகும திட்டப் பயனாளிகள் பட்டியலில் பாதிக்கப்பட்டோரின் பெயரை உள்ளடக்குவதற்கு முயற்சி செய்கிறேன் எனவும் பிரதேச செயலாளர் எம்மிடம் கூறினார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, மேற்படி பெயர்ப்பட்டிலை ரத்துச் செய்வதற்கும் - உண்மையான பயனாளிகளின் பெயர்கள் அடங்கியதொரு பட்டிலைத் தயாரித்து – கறவை மாடுகளை அவர்களுக்கு வழங்க உதவி புரியுமாறும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் தவிசாளர் என்கிற வகையில் உங்களை வேண்டுகிறோம்' என்றனர்.  

மகஜரினைப் பெற்றுக் கொண்ட தவிசாளர் நசீர் - அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களை அழைத்துக் கொண்டு பிரதேச செயலகம் சென்று, இவ்விடயம் குறித்து பிரதேச செயலாளரிடம் பேசியதோடு, கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் தயாரித்து வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலினையும் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுப்பேன் என தவிசாளர் நஸீர் மக்களிடம் உறுதி வழங்கினார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 24 December 2011 02:15 AM

    அம்பாறை மாவட்ட மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களைவிட, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடு பாராட்டத்தக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .