2025 ஜூன் 26, வியாழக்கிழமை

களஞ்சியசாலை இருந்தும் நெல் கொள்ளவனவு இல்லை; விவசாயிகள் அதிருப்தி

Menaka Mookandi   / 2012 மார்ச் 09 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையினருக்குச் சொந்தமான பாரிய களஞ்சியசாலையொன்று அமையப்பெற்றுள்ள போதும், அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால், தற்போது தாம் அறுவடை செய்யும் நெல்லினை தனியாருக்கு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நெல் சந்தைப்படும் சபைக்குச் சொந்தமான பாரிய களஞ்சியசாலையொன்று அமையப்பெற்றுள்ளது. ஆயினும், நெல் சந்தைப்படுத்தும் சபையினர் கடந்த போகங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து - குறித்த களஞ்சியசாலையில் சேமித்து வைத்துள்ள நெல்லினை இதுவரை அகற்றாமை காரணமாக, தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த முடியாததொரு நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாகவே, அந்தப் பகுதிகளிலுள்ள விவசாயிகளின் தற்போதைய பெரும்போத்துக்குரிய நெல்லினை நெற் சந்தைப்படுத்தும் சபையினர் கொள்வனவு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, கடந்த போகங்களில் கொள்வனவு செய்யப்பட்டு குறிப்பிட்ட களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லினை உடனடியாக அகற்றிவிட்டு, தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்ளவனவு செய்யுமாறு இந்தப் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.

அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளர். அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமுள்ள நெல்லினைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் - நெற்சந்தைப்படுத்தும் சபையினருக்கு 1,000 மில்லியன் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு 100 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .