2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நெல்லுக்கு பதிலாக கரும்பு பயிரிடும் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஏப்ரல் 06 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஆர். அஹமட், ஏ.ஜே.எம். ஹனீபா)

இறக்காமப் பிரதேச விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறக்காமத்திலுள்ள வெள்ளங்காடு, வாழக்கால் விவசாய நிலங்களில் கரும்புச் செய்கையினை மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்த உத்தரவினை அடுத்தே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள கரும்புக்காணிகளில் கடந்த 16 வருடங்களாக தாம் நெற்செய்கையில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில் தற்போது கரும்பு செய்கையை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் நெற் செய்கையை தொடர்ச்சியாக செய்வதற்கு அனுமதிக்குமாறும், அவ்வாறு கரும்புச் செய்யை மேற்கொள்வதாயின் விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கோரியும் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக விவசாயிகள்  தெரிவித்தனர்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் 1996ஆம் ஆண்டிற்கு முன்னர் கரும்புச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்ட போதிலும் நஷ்டத்தினையே அனுபவிக்க வேண்டி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1996ஆம் ஆண்டின் பின்னர் ஹிங்குரானை சீனித் தொழிற்சாலை முறையாக இயங்காத காரணத்தினால் விவசாயிகள் தமது காணிகளில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டார்கள்.

அத்தோடு பெரும் செலவில் கரும்புச் செய்கைக்கு பயன்படுத்திய தமது காணிகளை வேளாண்மைச் செய்கைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

தற்போது ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையை தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளதனை அடுத்து மேற்படி குறிப்பிட்ட காணிகளில் கரும்புச் செய்கையின மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் பணிக்கப்பட்டுள்ளது.

கரும்புச் செய்கையில் ஈடுபட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படவே வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ஆதலால், தொடர்ந்தும் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதற்கே விரும்புகின்றோம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

'நாங்கள் கரும்புச் செய்கையில் ஈடுபட வேண்டுமாக இருந்தால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறந்த கரும்பு நாற்றுக்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு தொன் கரும்புக்கு ரூபா 5000 வழங்கப்படுதல் வேண்டும். நஷ்டம் ஏற்படும் போது அதற்கான பொறுப்பினை அரசாங்க அதிபர் ஏற்க வேண்டும். யானைகளின் தொல்லை இருப்பதனால் காப்புறுதி வழங்கப்பட வேண்டும். மாதாந்தம் ரூபா 15 ஆயிரம் வேதனம் வழங்ஙக வேண்டும்.

இந்நிபந்தனைகைள ஏற்றுக் கொண்டால் கரும்புச் செய்கையில் ஈடுபடுவோம். இல்லையாயின் வேளாண்மைச் செய்கையிலேயே ஈடுபடுவோம்' என விவசாயிகள் தெரிவித்தார்கள்.




You May Also Like

  Comments - 0

  • Thariq Niyas Saturday, 07 April 2012 02:46 AM

    ஏழைகளின் வயிற்றிலடிக்கும் செயற்பாடுகள் தொடர்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .