2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதில் அரசுக்கு தொடர்பில்லை: இராணுவ கட்டளை தளபதி

Super User   / 2012 ஏப்ரல் 25 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.சுக்ரி)


தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரோ  தெரிவித்தார்.

இச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று புதன்கிழமை கல்முனைக்குடி ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போதே கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல் உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால் திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள் அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன்" என்றார்.

கல்முனைகுடி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற  இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண இராணுவ  கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல்  லால் பெரேரா, அம்பாறை மாவட்ட கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் ஹரிந்த பெரேரா, அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல, அம்பாறை மாவட்ட உலமா சபை தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி மற்றும் அகில இலங்கை நல்லுறவு ஒன்றிய தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் உலமாக்களை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியால கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்த பேச்சு நடத்தினார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

"ஒரு சில பௌத்த மதகுருக்களின் நடவடிக்கைக்கு முழு  பௌத்த சமூகமும் ஆதரவு தெரிவிக்கவில்லை. தம்புள்ள பள்ளிவாயல் சம்பவமானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் விரிசலையம் ஏற்படுத்த செய்யும் நடவடிக்கையாகும். ஒரு சில பௌத்த மதகுருக்களின் நடவடிக்கையைக் கொண்டு முழு  பௌத்த மக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

யார் பிழை செய்தாலும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முஸ்லிம் மக்கள் அமைதியை கடைப்பிடிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இலங்கைக்கெதிரான ஜெனீவா பிரேரணையின் போது முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கே பூரணஆதரவு அளித்ததை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

நாட்டில் மூன்று வருடங்களாக சமாதானமாக நிம்மதியாக இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இன்றைய சூழ்நிலையை குழப்புவதற்காக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கோணங்களில் பல சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தச மாதானத்தை மேலும் ஸ்த்திரப்படுத்த குறிப்பாக முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். தம்புள்ள பள்ளிவாயல் சம்பவத்தை ஊடகங்கள் திரிவுபடுத்தியுள்ளன. இதனை பலரும் தங்களின் தேவைகளுக்குஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டுபலவிதமான இலபாத்தை தேட முற்படுகின்றனர். இது விடயத்தில் முஸ்லிம் மக்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்குமாறுகேட்டுக்கொள்கின்றேன்" எனஅவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடிஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள் உலமா சபை பிரதிநிதிகள் உட்படமுக்கியஸ்த்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பிரிகேடியர் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .