2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாகப் போட்டியிடும்'

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்,எஸ்.மாறன்)


'அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாகப் போட்டியிடும். கடந்த தேர்தலில் த.தே.கூட்டமைப்பு போட்டியிடாததன் காரணத்தினால்தான் பிள்ளையானால் முதலமைச்சராக வர முடிந்தது. ஆனால், அந்த நன்றியினை பிள்ளையான் மறந்து விட்டார். கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் பதவி இனி பிள்ளையானுக்கு ஒரு போதும் கிடைக்காது' என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
அமரர் தந்தை செல்வாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபைத் தவிசாளர் க. ரத்தினவேல் தலைமையில இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியினை தற்போது முஸ்லிம்கள் இலக்கு வைத்துள்ளார்கள். அதேவேளை, தமிழர்களாகிய நாமும் உரிமை ரீதியில் அந்தப் பதவியினை எதிர்பார்க்கின்றோம். எனவே, அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது உரிமையினை வென்றெடுக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை இப்போதுள்ள சிலர் விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள். ஏனென்றால், தமிழரசுக் கட்சி அப்போது போட்டு வைத்த அத்திவாரத்தில்தான் இவர்கள் வீடுகட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்போது, இவர்கள் வசிக்கும் வீடு எங்கள் தந்தை செல்வா போட்ட அத்திவாரத்தில் அமைக்கப்பட்டதாகும்.

தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தந்தை செல்வா காட்டித் தந்த அஹிம்சை வழியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, அரசாங்கம் நியாயமான தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இன்னொரு வேலுப்பிள்ளையின் மகன் இந்த நாட்டில் உருவாகி இன்னொரு போரினை ஆரம்பிக்கும் நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது' என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமரர் தந்தை செல்வாவின் மேற்படி 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வினை, மட்டக்களப்பு  அம்பாறை மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் பொன். செவ்வராஜா உரையாற்றுகையில், 

'தென்பகுதியில் இருந்து தமிழர்கள் 1983ஆம் ஆண்டிலும் பின் போர் நடந்த காலங்களிலும் அகதிகளாக்கப்பட்டு வடக்கிற்கும் கிழக்கிற்கும் கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டார்கள.; இவ்வாறு தமிழ் மக்கள் பேரினவாதிகளால் விரட்டப்பட்டது போல் இன்று முஸ்லிம் மக்கள் தென்பகுதியில் இருந்து விரட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் அண்மைக்கால சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அநுராதபுரத்தில் முஸ்லிம் வணக்கஸ்தலமான தர்கார் ஒன்றை அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தனை அதிகாரங்களை பாவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டும் அது மீளக்கட்டியெழுப்ப முடியாமல் போன துர்பாக்கிய நிலையே இந்த நாட்டில் இருந்துள்ளது. இதற்கு பின்னர் கூட முஸ்லிம் சகோதர்கள் ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்துக்கு ஆதரவாக எத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள் என்பது நீங்கள் அறிந்த விடயம். அந்த வழியிலே இன்று மூன்று தினங்களுக்கு முன்னர் தம்புள்ள பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னிருந்தவர்கள் பௌத்ததுறவிகள் என நீங்கள் அறிவீர்கள்.;

அநுராதபுர சம்பவத்தை அடுத்து ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அரசாங்கத்திற்கு ஆதராக நம்நாட்டில் உள்ள சகல முஸ்லிம்களும்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது இரண்டாவது தடவையாகும் இதற்கு முன்னர் தந்தை செல்வாவின் காலத்திலே புத்தளத்தில் ஒரு பள்ளிவாசலில் ஏற்பட்ட அசம்பாவிதம் என்ன என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் இவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்களிடையே பேரினவாதிகள் ஏற்படுத்தி வருகின்ற விடயங்களை எதிர்த்து குரல்கொடுக்க வேண்டிய முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு திராணியற்றவர்களாக இருந்திருக்கின்றனர்

ஜெனீவா பிரேரணைக்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று ஆதரவைத்திரட்டி இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கச் செய்த அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் தீவிரவாதம் அடித்த சவுக்கடி மட்டும் அல்ல. பேரினவாதம் கொடுத்த நன்றிக்கடன் இந்த தம்புள்ள பள்ளிவாசல் உடைப்புச் சம்பவமாகும்.

முஸ்லிம் மக்கள் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு செய்ததையிட்டு வரவேற்கின்றோம். இந்த கடையடைப்பு போல் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு இனிமேலும் பேரினவாதத்திற்கு எதிராக எழவேண்டும் கல்முனை மாநகரசபை பதில் மேயர் நிசாம் காரியப்பர் கூறியதைப்போல தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் இந்த பேரினவாத சக்;திகளுக்கு எதிராக கூட்டாக செயற்பட வேண்டும் என அறைகூவல் கூறியிருந்தார்

இதேபோல் இந்த பேரினவாதத்திற்கு எதிராக ஒரே மொழியை பேசுகின்ற இரு சிறுபான்மை இனங்களும் சேர்ந்து பேரினவாத அட்டகாசத்துக்கு சாவுமணி அடிக்கவேண்டும். எனவே இனிமேல் ஆவது முஸ்லிம் சகோதரர்கள் எம்மிடம் இணைந்து வாருங்கள் என கோரிக்கை விடுக்கின்றோம்
தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு  தமிழரசு கட்சியை ஆரம்பித்த அதேகாலத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றம் நடைபெற்றது. இங்கே இருந்த தமிழினம் சிறுபான்மையாக்கப்பட்டதுடன,; ஜக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக தயாரட்ண இருந்த காலத்திலே இரு சிங்கள பிரசேங்களை இந்த மாவட்டத்துடன் இணைத்து எமது சகோதர முஸ்லிம் இனத்தை குறைத்தனர்

இதேவேளை கல்லோயாக்குடியேற்றம் முழுக்க முழுக்க சிங்களவர்களை குடியேற்ற திட்டமிட்டபோது தந்தை செல்வா உடனடியாக அமிர்தலிங்கத்தை அனுப்பி பின் திட்டத்தை திருத்தி அரசாங்கத்துடன் பேசி முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் குடியேற்றக்கிராமங்களில் 25 வீதம் குடியேற்றபட்டது. அன்று அந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று சம்மாந்துறைக்கு அப்பால் முஸ்லிம் கிராமங்கள் இன்று இருந்திருக்காது' என்றார்










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .