2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், குறித்த பள்ளிவாசலை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதான கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வெள்ளிக்கிழமை சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையினை தவிசாளர் - சபையில் முன்வைத்தார்.

பிரதேச சபையின் தவிசாளர் நசீர் - பிரேரணையினை முன்வைத்து உரையாற்றுகையில்,

'தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலானது முஸ்லிம் மக்களின் மனங்களில் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு சமூகத்தின் மதஸ்தலத்தினையும் உடைப்பதற்கு அடுத்த சமூகத்தவருக்கு உரிமைகள் கிடையாது.

ஜெனீவாவில் ஏற்பட்ட கண்டத்திலிருந்து இந்த அரசாங்கத்தினையும், ஆட்சியாளர்களையும் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடுகளுமே காப்பாற்றியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில், நன்றி கெட்டதனமாக முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதானது வேதனையானதொரு விடயமாகும்.

தம்புள்ள விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடுகளும், சொல்லியிருக்கும் செய்திகளும் குறிப்பிடத்தக்கவை. அவரின் பாதையினைப் பின்பற்றியே இன்று இந்த சபையில் தம்புள்ளை விவகாரத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.

அம்பாறை மாவட்டம் முழுவதும் நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் மற்றும் அமைதி ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த அரசுக்கு சிறந்ததொரு செய்தி முன்வைக்கப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொண்டு இந்த விடயத்தில் ஜனாதிபதி தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது சமூகத்துக்காகக் குரல் கொடுப்பதற்காகவே – மக்கள் இந்த சபைக்கு எம்மைத் தெரிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இன்று சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் மௌனிகளாக இருப்பது வெட்கக்கேடானதொரு விடயமாகும்.

தமிழரோ, முஸ்லிமோ அல்லது கிறிஸ்தவரோ - எந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் மத உரிமை மதிக்கப்பட வேண்டும், அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும்' என்றார். 

இவ்விவகாரம் தொடர்பில் சபையின் மு.கா. உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் பேசுகையில்,

'ஓவ்வொரு மதஸ்தானம் இருக்கும் இடமும் அந்தந்த மதத்தவர்களுக்கு புனித பூமிதான். இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது சுயநலவாதப் போக்காகும். எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களின் நிலங்கள் புனித பூமி எனும் பெயரில் அபகரிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவி உடையுடன் குண்டர்கள் போன்று வெளியிலிருந்து சிலரைத் திரட்டி வந்து பள்ளிவாசலை உடைத்த கொடுமையினை உலகமே பார்த்தது.

நாட்டின் இறைமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்த நன்றியினைக் கூட, இந்தப் பேரினவாதிகள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை என்பது வேதனையளிக்கின்றது.

மேலும், பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்று நாட்டின் பிரதம மந்திரியே தீர்மானமொன்றினை எடுத்திருப்பது - நாட்டின் இன ஐக்கியத்துக்கு குந்தகத்தினை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது.சண்டித்தனத்தின் மூலம் நாட்டின் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கவும் அடக்கவும் நினைப்பது அராஜகமான செயற்பாடாகும்' என்றார்.

பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவரும், அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான எம்.எல்.எம். பாரீன் இதன் போது உரையாற்றுகையில்,

'தம்புள்ளை விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்க வேண்டிய சமூக விடயமாகும். இவ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு சிறந்த தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்.

அவ்வாறு முடியாது விட்டால், தொடர்ந்தும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பதில் சமூகத்துக்கு எவ்விதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை' என்றார்.

மேற்படி சபை அமர்வின் போது, தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்திருந்தனர். குறித்த கண்டனத் தீர்மானம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுகளுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, சபையின் உதவித் தவிசாளர் எம்.ஏ. அன்சில், உறுப்பினர்களான ஐ.எல். மனாப், ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். சுபைதீன் மௌலவி, எதிர்க்கட்சித் ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .