2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தம்புள்ள பள்ளிவாசல் குறித்த பிரதமரின் கருத்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது: அமைச்சர் எம்.

Kogilavani   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ள பள்ளிவாசலை வேறொரு இடத்திற்கு இடமாற்றுவதாக பிரதமர் தெரிவித்துள்ள கருத்து இலங்கை முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கூறியுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி, கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதித் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றபோது  தம்புள்ள நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டது குறித்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலியினால் கொண்டுவரப்பட்ட கண்டனப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இலங்கை நாட்டில் வாழும் சகல மத மக்களும் தங்கள்  மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், அந்த வழிபாட்டுத் தலங்களை புனிதமாக பாதுகாக்க வேண்டிய உரிமையும் இருக்கின்றது. 'எங்களுடைய இஸ்லாம் மதம் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் கூட அன்னிய மதத் தலைவர்களை கண்டால் அவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என்றும், அன்னிய வழிப்பாட்டுத் தலங்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது'.

இன்று தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதற்காக கிழக்கு மாகாண சபையில் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றோம். அதேபோல் ஏனைய வணக்கத் ஸ்தலங்களுக்கு ஆபத்து, அநியாயங்கள் ஏற்பட்ட போது நாங்கள் குரல் கொடுத்திருக்கின்றோம். கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகித்தாலும் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமல்லாமல் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுகின்ற போது அந்த மக்களின் குரலாக கடந்த 4 வருட காலமாக கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக குரல் கொடுத்திருக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையில் மூவின மக்களின் பிரதி நிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். நாங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் நமது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். உண்மைக்கு உண்மையாக சில சம்பவங்கள் நடைபெறுகின்ற போது அதனை தட்டிக் கேட்க வேண்டிய, தடை செய்ய வேண்டிய மற்றும் அதற்காக குரல் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபையின் கடந்த 4 வருட ஆட்சி காலத்தில் உள்ளூராட்சி திருத்த சட்டம், நாடு நகர அபிவிருத்தி சட்டம் மூலம் கிழக்கு மாகாண சபைக்கு கொண்டுவரப்பட்ட போது சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய மிக முக்கியமான இந்த இரண்டு சட்ட மூலத்தையும் ஆளும் கட்சியின் இருந்து கொண்டே அதற்காக குரல் கொடுத்து அதனை வாபஸ் பெற செய்துள்ளோம்.

இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறான வரலாற்று நிகழ்வுகளை சந்தித்த நாங்கள் முஸ்லிம்களுடைய தம்புள்ள நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் சில இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளதையும் அந்த பள்ளி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் குரல் கொடுத்தே ஆகுவோம்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து கொழும்பை நோக்கி பிரயாணம் செய்யும் முஸ்லிம் மக்கள் தம்புள்ள நகரில் இயங்கி வந்த பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர். விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இருந்து மட்டக்களப்பு பொலன்னறுவை ஊடாக கொழும்பை நோக்கிப் பயணம் செய்கின்ற போது பொலன்னறுவை கதிரவெளி பள்ளிவாசலிலும், தம்புள்ள பள்ளி வாசலிலும் தமது மார்க்க கடமைகளை செய்து வந்தனர் என்பது வரலாறு ஆகும். இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளி வாசலை சில இனவாதக் குழுக்கள்  தாக்கியதுடன், இப்பள்ளி வாசலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுவதை முஸ்லிம்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கடந்த 30 ஆண்டு காலமாக நமது நாட்டில் இருந்நத யுத்த சூழ்நிலை இல்லமல் போய் மூன்று இனமும் சமாதானமாக வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டு அதிகாரப்பகிர்வு தொடப்பாக பேசிக் கொண்டிக்கும் இந்தக் கால கட்டத்தில் ஒரு சில இனவாதக் குழுக்களால் இந்த மோசமான நடவடிக்கயினால் இனவாத சக்திகளினால் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்த சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றெடுக்கும் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

நமது நாட்டின் இனப்பிரச்சினையயைத் தீர்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது நம்பிக்கை வைத்து சிறுபான்மை மக்கள் அவரை ஜனாதிபதி ஆக்கவதற்கு பெரும் ஆதரவு வைத்து அவருக்கு வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினர். அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் உள்ளத்தால் நமது நாட்டின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பல திட்டங்களை முன்வைத்தார். ஆனால் அவரின் ஆட்சியில் இருந்த சிலர் நமது இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சந்தர்பம் கொடுக்காமல் தடைசெய்தனர்.

அதன் பின்னர் ஜனாதபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, யுத்தம் தொடர்பான தீர்க்கமான அரசியல் தீர்மானத்தை எடுத்த 30 வருட காலமாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நமது நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டு ஒரு அமைதியான நிலை உருவாக்கப்பட்டது.

நமது அரசியல் தீர்வு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளபட்ட வருகின்ற இக்கால கட்டத்தில் நமது கிழக்க மாகாணத்திற்கு 13ஆவது அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற வேளையில்  அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற சில இனவாதக் கட்சிகள் நமது மக்களுக்கு 13ஆவது சரத்திற்குட்பட்ட அதிகாரங்களை வழங்கக் கூடாது என்றும் அவ்வாறு வழங்கினால் இந்நாட்டில் பிரச்சினை எற்படும் என்றும் அரசாங்கத்தில் இருந்து கொண்டே சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்செயற்பாடானது நமது சிறுபான்மை மக்களுக்கு எதிரானவைகள் ஆகும். நமது மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்டும் போது குறைந்தளவு அதிகாரம் கூட வழங்கப்டக் கூடாது என்பது ஒரு வேதனையான விடயமாகும். தேசியக் காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சருமான ஏ.ஏல்.ஏம். அதாவுல்லா தலைமையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற ஒரு தனித்தவமான கட்சியாகும்.

நாம் ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவியில் இருக்கின்றோம் என்றாலும் நமது நாட்டில் உள்ள தமிழ் மஸ்லிம் மக்களுக்கு அநியாயம் நடக்கின்ற போது ஒரு குரலாக இருந்து செயற்படுகின்றோம்.

ஜெனிவாவில்  அதிகம் முஸ்லிம் நாடுகள்  நமது தாய் திருநாட்டிற்கு ஆதரவு தந்த போதும் இவ்வாறான பேரினவாதிகளின் செயற்பாட்டினால் அம்முஸ்லிம் நாடுகள் அதிருப்தி அடைந்த நிலையிலும், முஸ்லிம் நாடுகள் இது விடயத்தில் மிகவும் கரிசனையாவும் இருக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .