2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பட்டதாரி பயிலுநர் நியமனம் தொடர்பாக சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அதிருப்தி

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உள்வாரி பட்டதாரி மாணவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் போது தம்மை கவனித்திற் கொள்ளாமல் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது குறித்து  சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையான கண்டனத்தையும் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2006/2007 ஆகிய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டு கல்வியைத் தொடர்ந்த உள்வாரி பட்டதாரி மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், சென்ற வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் 2011இல் இடம்பெற வேண்டிய இறுதி வருட பரீட்சை 2012 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டது. இதனால் 2011 இல் பரீட்சை எழுதி வெளியேற வேண்டிய மாணவர்கள் 2012 இல் பரீட்சை எழுதி வெளியேற வேண்டிய  ஒரு நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி பயிற்சி நியமனத்தில் 2011 ஆம் ஆண்டும் அதற்கு முன் வெளியேறிய பட்டதாரிகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டதால் 2006/2007 கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்டு வெளியேறிய பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. இதேவேளை, 2006/2007 கல்வியாண்டிற்கு பதிவு செய்யப்பட்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடிவுத் திகதி 2011 இல் அமைந்துள்ளதால் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து 2011 இல் உள்வாரி பட்டதாரி மாணவர்கள் வெளியாகவில்லை. அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் 2012 இல் முதற் பகுதியில் வெளியான இம்மாணவர்களே. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியமனம் கிடைக்காமல் போனதனால் பெரும் வேதனையுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள இந்த பட்டதாரி மாணவர்கள் பற்றி  எவரும் கவனத்திற் கொள்ளாமலிருப்பது இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே அரசியல் வாதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பட்டதாரி பயிற்சி நியமனம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக வேண்டுகிறோம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .