2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பாலமுனை ஹிரா நகர் வீடுகளை பங்கிடுவதில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹிரா நகர் எனும் புதிய கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வீடுகளைப் பங்கிடுவதில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், பயனாளிகள் தெரிவில் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் முறையிட்டுள்ளனர்.

மேற்படி வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் விடயத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுவோர் சார்பில் மூன்று பொதுமக்கள் இணைந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே மேற்படி முறையீடு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபையினூடாக 9 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஹிரா நகர் எனும் புதிய கிராமம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன்படி பாலமுனைக் கிராம எல்லைக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தின் காட்டுவட்டைப் பிரதேசத்தை உள்ளடக்கி அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதன் மூலம், குறித்த ஹிரா நகர் எனும் புதிய கிராமம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

எனினும், இவ் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கு எவ்வாறான நியமம் பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை அறிய முடியாமலுள்ளது. ஏனெனில், குறித்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களாக நாங்கள் இருக்கின்றோம். நாம் குறைந்த வருமானத்தினைப் பெறுபவர்கள், நாங்கள் குடியிருக்கும் நிலம் நீண்டாகாலமாகவே எமக்குச் சொந்தமாகவுள்ளது. அதேவேளை, இதுவரை எந்தவிதமான உதவித் திட்டம் மூலமும் எதுவித வீடமைப்பு உதவிகளையும் நாம் பெறவில்லை.  இந்த நிலையில், மேற்படி வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

இதேவேளை, குறித்த பிரதேசத்தினை நிரந்தர வசப்பிடமாகக் கொள்ளாதவர்களும், வசதி படைத்த போடிமார்களும், தனவந்தர்களும், அரச உத்தியோகத்தர்கள் அல்லது அவர்களின் உறவினர்களும், நெற்செய்கைக் காணிகளை குடியிருப்புக் காணிகளாகக் காட்டியவர்களும், இப் பகுதியில் காணிகளை மிக அண்மைக் காலத்திலேயே கொள்வனவு செய்தவர்களும் மேற்படி வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம்.

அது மட்டுமன்றி, குறித்த வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எந்தவிதமான வெளிப்படைத் தன்மைகளும் பேணப்படவில்லை. அதேவேளை, பயனாளிகளைத் தெரிவு செய்வதில் வெளியார் சிலரின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனவே, மேற்படி விடயங்களை கவனத்திற் கொண்டு எமக்கு நீதி கிடைக்க ஆவண செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

குறித்த கடிதத்தின் பிரதிகள்ளூ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.                                                                              

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .