2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்முனை மாநகரசபையின் தீயணைப்பு படையை பலப்படுத்த நடவடிக்கை

Thipaan   / 2015 மார்ச் 17 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவை பலப்படுத்தி 24 மணித்தியாலங்களும் இயங்கும் வகையில் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், இன்று செவ்வாய்க்கிழமை(17) தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடை ஒன்று தீப்பற்றி எரிந்த போதிலும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்தில் செயற்படவில்லை என்று முதல்வரின் கவனததுக்;கு கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து அப்பிரிவினரை இன்று செவ்வாய்க்கிழமை காலை அவசரமாக அழைத்து முதல்வர் விசாரணைகளை மேற்கொண்டு கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த முதல்வர் கூறியதாவது,

'கல்முனை மாநகர சபையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு படைப் பிரிவினருக்கு இன்னும் போதிய பயிற்சிகள் வழங்க்கபடவில்லை.

அது மாத்திரமன்றி குறித்த தீ விபத்து சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எனினும் எமது தீயணைப்பு பிரிவினருக்கு 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதி இல்லை என்பதால் அவர்களுக்கு சம்பவம் குறித்த தகவல்களை அறியப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை.

ஆகையினால் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் நான் தீவிரமாக ஆராய்ந்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

இதன் பிரகாரம் எமது மாநகர சபையின் தீயணைப்பு படைப் பிரிவினருக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒரு வார கால விசேட பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அடுத்த வாரமளவில் அமுல்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

அத்துடன் தீயணைப்பு பிரிவில் உள்ள ஏனைய குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கான் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை அப்பிரிவினருக்கு 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் எமது மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு 24 மணி நேரமும் செயற்றிறன் மிக்கதாக இயங்கும் என மக்களுக்கு உத்தரவாதமளிக்கின்றேன்' என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X