2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'வெற்றிலைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மஹிந்தவை பலப்படுத்தும்'

Gavitha   / 2015 ஜூலை 23 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், வெற்றிலைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை பலப்படுத்தும். எனவே நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான இம்ரான் மஹ்ரூப் கூறினார்.

கிண்ணியா, பெரியாற்றுமுனை பகுதியில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மையினரான நாம் அனுபவித்த துன்பங்கள் இலகுவில் மறந்து விடக் கூடியவை அல்ல. எங்களது பள்ளிவாயல்கள், கோவில்கள், தேவாலயங்கள் தாக்கப்பட்டன. எங்களது சமயக் கடமைகளைச் செய்ய முடியாது நாம் அச்சுறுத்தப்பட்டோம்.

முஸ்லிம்களது வியாபார முயற்சிகள் முடக்கப்பட்டன. பெரும், பெரும் முதலாளிமார் தமது உயிரைப் பாதுகாக்க வெளிநாடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் மறைமுகமாக கப்பம் கொடுத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அளுத்கமயில் நடந்த கொலை, வன்செயல்கள், சொத்தழிப்புகள் என்பவற்றை நாம் இலகுவில் மறந்து விட முடியாது.

கிறீஸ்மனிதன் பிரச்சினை, திட்டமிட்ட முறையில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் மட்டும் ஏற்படுத்தப்பட்டது.

இதனால் நோன்பு காலங்களில் கூட நிம்மதியாக நம்மால் தூங்க முடிய வில்லை. நிம்மதியாக நோன்பு நோற்க முடியவில்லை. பள்ளிவாயல்களுக்குள் படையினர் சப்பாத்துக் கால்களுடன் நுழைந்து அட்டகாசம் செய்தனர்.

இது போன்ற நிலை மீண்டும் நமக்கு ஏற்பட்டு விடக்கூடாது. நமது பிள்ளைகள், நமது எதிர்காலம் என்பவற்றை சிந்தித்து நாம் வாக்களிக்க வேண்டும். இப்போது வெற்றிலை சின்னம் மஹிந்த ராஜபக்ஷவுக்குரியது. எனவே, நாம் நமது உறுப்பினர்களுக்கு என நினைத்து வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மஹிந்த ராஜபக்ஷவையே பலப்படுத்தும். அது நமது நிம்மதியை அழித்து விடும்

இப்போது ஐக்கிய தேசியக் கட்சி எல்லாதரப்பினரையும் உள்ளடக்கி ஐக்கிய தேசியக்  முன்னணியாக மாறியுள்ளது. இது நல்லாட்சியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முன்னணியாகும். எனவே, இந்த நிலையை உணர்ந்து நாம் அனைவரும் இம்முறை யானைச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் பெரும்பாலும் நான் எதிர்க்கட்சியிலேயே இருந்ததால், பல விடயங்களில் குரல் கொடுக்க முடிந்தது. அதன் மூலம் பல விடயங்கள் நடந்தேறின என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, ஆளுங்கட்சியில் இருந்தும் சேவை செய்யக் கூடிய ஒரு வாய்ப்பை இத்தேர்தலில் எனக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .