2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உயிராபத்து ஏற்பட்டால் மு.கா.வே பொறுப்பு: இஸ்மாயில்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எ.எஸ்.எம்.முஜாஹித்

உபவேந்தர் இஸ்மாயில் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது காதை அறுப்பேன், அவரை நாடாளுமன்ற கதிரையில் அமர விடமாட்டேன் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக மேடையில் பேசி அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என எனது ஆதரவாளர்கள்  அச்சமடைந்துள்ளனர் என்று முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான செயலகத்தில் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நீதித்துறையில் ஒரு அமைச்சராக இருந்தவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பதென்பது மக்களைக் குழப்புகின்ற செயலாகும்.

இவ்வாறு மக்களைக் குழப்புவதென்பது ஹக்கீமுக்கு முதல் தடவையல்ல. காலத்துக்கு காலம் வருகின்ற பிரச்சினைகளை முன்வைத்து அவர் மக்கள் மீது குழப்பமான கருத்துக்களை விதைத்துத்தான் இலாபம் சம்பாதித்து வருகின்றார். ஆனால், இம்முறை அவரது குழப்பங்கள் எடுபடவில்லை.

ஒரு கட்சியை வழி நடத்துகின்ற ஒரு சமூகத்தை வழி நடத்துகின்ற பொறுப்பு வாய்ந்த தலைவர் இவ்வாறு மக்களை குழப்புவதென்பது உண்மையில் மிகவும் வெட்கக்கேடான விடயமாக இருக்கின்றது.
 
சம்மாந்துறையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் தலைவர் அஷ்ரப்பை மக்கள் எவ்வாறு ஆதரித்து கட்சியை முன்னேற்றினார்களோ அவ்வாறே இன்று எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனை மக்கள் ஆதரிக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்குப் பின்னர் பல விஷமப் பிரசாரங்களை செய்து எனக்கு எதிராக வழக்குத்தாக்;கல் செய்து மக்களை குழப்பினார்கள்.

ஆனால், இன்று அந்த வழக்கு விசாரணை செய்யப்பட்ட போது ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின் ஆதரவு இன்னும் அதிகரித்துள்ளது. நாங்கள் இரண்டு ஆசனங்களை பெறுவோம். இருந்த போதிலும் எனக்கு ஏதாவது உயிர் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பும் முஸ்லிம் காங்கிரஸையே சாரும் என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .