2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அண்மித்த பிரதேச செயலகங்களில் நியமனங்களை பெற்றுத்தர வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல்.மப்றூக்

பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால், அண்மையில் முகாமைத்துவ உதவியாளர்களாக நியமனங்கள் வழங்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களில் பலர், தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.  

எனவே, தூரப் பிரதேசங்களில் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்ட இந்த நியமனங்களை இரத்துச் செய்து, தாங்கள் வதியும் இடங்களுக்கு அண்மித்ததாகவும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிரதேச செயலகங்களுக்கும் நியமிக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச முகாமைத்துவ உதவியாளர் தரம் – 03 பதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சைக்கு தோற்றி, அதில் சித்தியடைந்தவர்களுக்கு கடந்த 08ஆம் திகதி கொழும்பில்  நியமனங்கள் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பேர் இந்த நியமனங்களைப் பெற்றனர். இவர்களில் 18 பேர் அம்பாறை மாவட்டச் செயலகத்துக்கு இணைக்கப்பட்டனர்.

மாவட்டச் செயலகத்துக்கு இணைக்கப்பட்டவர்களில் சிலருக்கு தமண, மகாஓயா, தெஹியத்தகண்டி, லஹுகல, உகண ஆகிய தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களில் சேவையாற்றும் வகையில் மாவட்டச் செயலாளரால் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலருக்கு 50 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரையான தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள பகுதிகள் பெரும்பான்மையினப் பகுதிகளாகும். ஆனால், இந்த நியமனங்களைப் பெற்றவர்கள் சிங்களமொழியில் பரீட்சயமற்றவர்களாக உள்ளனர். இதனால், இவர்கள் – அங்கு கடமையாற்றுவதில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மாவட்டத்தின்; கரையோரப் பகுதிகளிலிருந்து நியமனங்கள்; வழங்கப்பட்டுள்ள மேற்படி பிரதேசங்களுக்கு செல்வதாயின், இரண்டு மூன்று பஸ்கள் மாறிப் பயணிக்க வேண்டியுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் போக்குவரத்துக்காக 100 தொடக்கம் 200 கிலோமீற்றர்வரை பயணிக்க வேண்டியுள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X