Princiya Dixci / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, சகா, எஸ். அஷ்ரப்கான், பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து, கல்முனையின் சில பிரதேசங்கள் இன்று (29) முற்றாக முடக்கப்பட்டு, இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பொதுச் சந்தையிலும் கல்முனைக்குடியின் ஒரு பகுதியிலும் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளில் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்றிரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை மக்கள் நடமாட்டத்தை முற்றாகக் கட்டுப்படுத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரியால் தனிமைப்படுத்தல் அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இதனால் இன்று (29) கல்முனை நகரின் தெற்குப் பகுதி மற்றும் கல்முனைக்குடியின் சில பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. கல்முனை மாநகர பொதுச் சந்தையும் முடக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதிகள் யாவும் சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இப்பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர வேறு எவரும் வீடுகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறே அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தரப்பினர் தவிர வேறு எவரும் இப்பிரதேசங்களினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் எல்லை வீதிகள் மூடப்பட்டிருந்ததுடன், முக்கிய சந்திகள் மற்றும் கல்முனை நகரின் முக்கிய இடங்களில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்ததுடன், சில விசேட இராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
எனினும், இப்பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதி ஊடான பொதுப் போக்குவரத்துகள் இடம்பெற்றதுடன், இப்பிரதேச பரப்பினுள் வாகனங்கள் எவையும் நிறுத்துவதற்கோ ஆட்களை ஏற்றி, இறக்குவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை.
நேற்று (28) மாலை வரை கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago