2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பழைய கல்விக் கந்தோர் வீதிக்கு முருகேசுப் பிள்ளையின் பெயர்

Niroshini   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பழைய கல்விக் கந்தோர் வீதிக்கு அமரர் கலாநிதி முருகேசுப் பிள்ளையின் பெயரை சூட்டுவது தொடர்பில் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் சமர்ப்பித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மணற்சேனை நோக்கி செல்லும் பழைய கல்விக் கந்தோர் வீதியின் பெயரை கலாநிதி முருகேசுப்பிள்ளை வீதி என மாற்றுவதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் கூறியதாவது,
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியக் கலாநிதி முருகேசுப்பிள்ளை, வைத்திய சேவைக்காக கல்முனைக்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் மிகச்சிறப்பாக பணியாற்றி மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

இக்காலப் பகுதியில் வெறும் வைத்திய சேவையுடன் நின்று விடாமல் சமூகப் பணிகளிலும் தமிழ், முஸ்லிம் ஐக்கியத்துக்காகவும் அவர் பெரிதும் உழைத்து வந்துள்ளார்.இதனால் அவர் கல்முனையின் சமாதானக் காவலனாகப் போற்றப்பட்டார்.

இத்தகைய ஓர் உத்தமரை என்றும் நினைவுகூரும் வகையில் அவரது பெயரை மேற்படி வீதிக்கு சூட்டி மாநகர சபை கௌரவமளிக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து,முதல்வர் நிஸாம் காரியப்பர் உரையாற்றுகையில்,

இப்பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்காக அயராது உழைத்து வந்த கலாநிதி முருகேசுப்பிள்ளை முஸ்லிம்களை மிகவும் நேசித்து வந்த ஒரு பெருமகனாவார். அவரது சேவைகள் என்றும் மறக்க முடியாதவை. ஆகையினால் அவரது பெயரை அவர் வாழ்ந்த வீதிக்கு சூட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணையை நான் பெரிதும் வரவேற்கின்றேன் என்றார்.

பிரதி முதல்வர் அப்துல் மஜீத் பேசுகையில்; 'வைத்தியத் துறையில் மிகவும் தீர்க்கதரிசியாகத் திகழ்ந்த டாக்டர் முருகேசுப்பிள்ளை அவர்கள், அக்காலப் பகுதியில் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்துள்ளார். அவரது அனுபவ ரீஎதியான வைத்தியத்தை நானும் நுகர்ந்துள்ளேன். அவர் அன்று எனக்கு வழங்கிய மருத்துவ ஆலோசனைகளை நான் இன்றும் கடைப்பிடித்து வருகின்றேன். அதில் சற்று  தவறிழைக்கும்போது அதன் பாதகத்தை நான் உணர்கின்றேன்' என்று குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .