2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யானை வேலி அமைத்தல் தொடர்பில் உயர்மட்டம் கூடியது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்தியத்தில் அதிகரித்துவரும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் உடமைகளையும் சொத்துகளையும் பாதுகாக்கும் நோக்கில், யானைவேலி அமைத்தல் தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல், நேற்று (26) நடைபெற்றது.

அம்பாறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், வன ஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.  

இதன்போது, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளக்கமளித்து, உடனடியாக அந்த வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டம், கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம், மருதமுனை பிரான்ஸ் சிட்டி சுனாமி வீட்டுத்திட்டம், குடுவில், வாங்காமம், நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்கள் அடங்களாக அம்பாறையின் ஏனைய பிரதேசங்களில் யானையின் கெடுபிடி அதிகமாக உள்ளதையும் அவர் எடுத்துரைத்து, மிக அவசரமாக யானை வேலிகளை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், டொக்டர் திலக் ராஜபக்ஷ, மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் டீ. வீரசிங்க, அம்பாறை அரசாங்க அதிபர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஸாத் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X