2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் குற்றவியல் குற்றமாகும்

R.Tharaniya   / 2025 ஜூன் 26 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையில், செவ்வாய்க்கிழமை (24) அன்று கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வீதியோரங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தல், பண்டங்கள் விற்பனை செய்வித்தல், வீட்டுப் பணிகள் உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்தல் எனும் தலைப்பின் கீழ்  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கே அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவான அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. புதிய புள்ளி விபரங்களுக்கமைவாக, நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 30  சதவீதமானவர்கள் சிறுவர்களாவர். 
தெருக் குழந்தைகளை அகற்றுவதற்கும், குழந்தைகள் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கும் எடுக்கப்பட்டிருக்கும் இந்த தீர்மானத்தை வரவேற்கும் அதேநேரத்தில், வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறார்களையும் மீட்டெடுத்து, பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும். 

குழந்தைகளைக் கையாள்வதற்காக நம் நாட்டில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில், குழந்தைகளைப் பயன்படுத்தி பிச்சை எடுத்தல் முக்கிய குற்றவியல் சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும், அபராதமும் விதிக்கப்படும் குற்றமாகும். 

அத்தகைய குற்றத்தைச் செய்யும் ஒருவரை பிடிவிறாந்து இல்லாமல் பொலிஸார் கைது செய்யலாம் என்றும், அந்தக் குற்றம் பிணையில் வெளிவர முடியாத குற்றம் என்றும் கூறுகிறது. 

குழந்தைகள் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டத்தின் பிரிவின் கீழ், பெற்றோர் அல்லாத நபர்கள் குழந்தைகளைப் பிச்சை எடுப்பதைத் தடை செய்கிறது. ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படுகின்றன.

கூடுதலாக, ஒரு நபர் ஒரு குழந்தையைக் காவலில் எடுத்து குழந்தையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு இரசாயனப் பொருளைக் கொடுத்திருந்தால்,   ஒரு குழந்தையைக் கொடுமைப்படுத்தியதற்காக 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறுகிறது. 

இந்த வழியில் கருத்தில் கொள்ளும்போது, குழந்தைகள் யாசகம் எடுக்கக் கட்டாயப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க நமது நாட்டில் தற்போது ஒரு வலுவான சட்ட அமைப்பு உள்ளது என்பது தெளிவாகிறது. அதனை முறையாக அமுல்படுத்த வேண்டும். 

உண்மையில், இந்தச் சட்டங்களைச் செயல்படுத்த சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்ட அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்தாமல் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார்கள் என்பதே பிரச்சனையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .