2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

பழைய பாதையை பின்பற்றும் பல்லவி தொடர்கிறது

R.Tharaniya   / 2025 மே 18 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவாக இறப்புகளும் நிரந்தர ஊனங்களும் ஏற்பட்டு வருகின்றன. விபத்துக்களில் படுகாயமடைந்தவர்கள் தங்களை குணப்படுத்திக்கொள்ள பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

2025 மே 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொத்மலை கெரண்டி எல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் 23 பேர் மரணமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர், வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவத்தை மறப்பதற்குள் கெரண்டி எல்ல பகுதிக்கு அண்மையில், வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில், சிறுவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அந்த வேனின் நிலையைப் பார்த்தால், அனைவரும் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர் என கூறமுடியும்.

அதே நாளில், தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் காரொன்று, மண்திட்டில் மோதுண்டு வீதியிலேயே குப்புறக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மொனராகலையில், காரொன்று வீதியை விட்டு விலகி, மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விரு விபத்துகளில் எவ்விதமான உயிர்ச் சேதங்கள் இடம்பெறவில்லை.

சில விபத்துகள்  தவிர்க்க முடியாதவை எனினும், சாரதியின் கவனக்குறைவு, அதிகூடிய வேகத்தின் காரணமாக, ஏற்படும் விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனமே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதனால், பாதசாரிகளும் பாதிக்கப்படுகின்றனர் என்பது மட்டுமே உண்மையாகும். 

ஒவ்வொரு துயரத்தையும் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு முயற்சிகள் இருந்தபோதிலும், சமூகம் அதே பழைய பாதையையே பின்பற்றுவது மற்றொரு சோகம்.

வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து பொலிஸாரின் கூற்றுப்படி, தினமும் 
12 பேர், வீதி விபத்துகளில் இறக்கின்றனர். முழுமையாக அல்லது பகுதியளவில் ஊனமுற்றோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

2005 முதல் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு ஜனாதிபதியும், ஒவ்வொரு போக்குவரத்து அமைச்சரும் போக்குவரத்துக்கான தேசியக் கொள்கை வகுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதற்காக பல்வேறு வரைவுகள் தயாரிக்கப்பட்டு, எண்ணற்ற சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டதற்கு வரலாறு சாட்சி.

இவை எதுவும் தேசிய போக்குவரத்து கொள்கையை உருவாக்குவதில் விளையவில்லை என்றாலும், அதற்காக ஒரு பெரிய அளவிலான நிதி அழிக்கப்பட்டுள்ளது என்பது 
உறுதி. இதற்குக் காரணம், எந்த ஒரு நடைமுறைத் திட்டங்களும் செயல்படுத்தப்படாததே ஆகும்.
போக்குவரத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு துறைக்கும் ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலை உருவாக்குவது அவசியம். 

இதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது என்பது தேர்தல் வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட  ஒரு செயல்முறையாகும் என்பதை நினைவில் கொள்க.

16.05.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X