2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

நுரையீரலுக்காக கூட்டுப்பாலியல்; சிறுமி சடலமாக மீட்பு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 17 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நுரையீரல் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கட்டம்பூர் பகுதியிலிருந்து இந்த சிறுமி தீபாவளியன்று இரவு காணாமல் போய் உள்ளார்.

  குழந்தைப் பாக்கியத்தைப் பெற ஒரு சிறுமியின் நுரையீரலைக் கொண்டு சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற மூட நம்பிக்கையால், சிறுமியின் உடலிலிருந்து நுரையீரல் அகற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான அங்குல் குரில் (20) மற்றும் பீரன் (31) ஆகியோர் முக்கிய குற்றவாளியும்  பரசுராம் குரிலிடம் சூனியம் செய்ய சிறுமியின் நுரையீரலை அளித்ததாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி பிரஜேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

பரசுராம் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரசுராமின் மனைவி  தெரிந்திருந்தும் அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பரசுராம் ஆரம்பத்தில் பொலிஸார்  விசாரணையை திசை திருப்ப முயன்றார். ஆனால், தீவிர விசாரணையை எதிர்கொண்ட அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் 1999 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதுவரை அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தனது மருமகன் அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் சிறுமியைக் கடத்தி, நுரையீரலை அகற்றும்படி வற்புறுத்தினார்.

அதிக அளவில் குடிபோதையில் இருந்த குற்றவாளிகள் சிறுமியைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு முன்பு அவரை பாலியல் பலாத்காரம்செய்தனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .