2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இஸ்ரேல் மீது விடாப்பிடியாக தாக்கும் ஈரான்: இடைவிடாது ஒலிக்கும் சைரன்

Editorial   / 2025 ஜூன் 23 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்' என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஜெருசலேமில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரான் - இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இன்றும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் சைரன்கள் ஒலித்தன.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இஸ்ரேல் முழுவதும் ஜெருசலேம் உள்பட பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலின் அஷ்டோட், லாச்சிஷ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் ஜெருசலேம் நகருக்கு தெற்கே உள்ள லாச்சிஷ் பகுதியில் நடந்த தாக்குதலால் கடும் சேதம் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஜெருசலேம் பகுதியில் மிகவும் சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஒலிகள் கேட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஜெருசலேம் மீது ஏவுகணைகள் உயரமாக பறப்பதையும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தியாக்கியுள்ளன.

மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலை நோக்கி அதிகளவில் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் சைரன்கள் மூலம் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நஹாரியா, கெஷர் ஹாசிவ், ஹிலா, மியோனா மற்றும் மியில்யா உள்ளிட்ட நகரங்களில் சைரன்கள் ஒலித்து வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .