2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

Editorial   / 2025 ஜூன் 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இருதரப்புக்கு இடையே மோதல் தொடர்கின்ற காரணத்தால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மற்றும் அமேரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் - ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. உலகத் தலைவர்கள் இந்த மோதல் கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.

 

ட்ரோன்கள் அழிப்புகடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் தங்கள் தேசத்தை நோக்கி எதிரிகள் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டவதாகவும், அதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவுஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார். இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உடன் ஷெபாஸ் ஷெரிப் பேசியுள்ளார். ஈரான் மீதான இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் தேசம் ஈரானுக்கு ஆதரவாக நிற்பதாக ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் தாக்குதல்ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையிலும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மற்றும் ஈரான் மக்களின் தரப்பில் இருந்து ஈரான் ராணுவ நடவடிக்கைக்கு உறுதுணையாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டோம் என ஹவுதி செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹவுதி படையினர் மேற்கொண்டனர்.

ட்ரம்ப் எச்சரிக்கைஎந்த வகையிலாவது அமெரிக்காவை ஈரான் தாக்கினால் அதன் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். “ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

தாக்குதலும் பதிலடியும்அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப் படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 6 அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட 78 பேர் உயிரிழந்தனர்; 320 பேர் காயம் அடைந்தனர்.

முதல்கட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை மாலையும் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் சனிக்கிழமை அதிகாலையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்’ என்று பெயரிட்டு பதிலடியாக ஈரான் வீசிய ஏவுகணைகள் மூலம் ‘அயர்ன் டோம்’ வான்பாதுகாப்பையும் மீறி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவத் தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளானது. ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகள் மீதும் குண்டுகள் விழுந்தன. இந்த தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகின.

பரஸ்பரம் குற்றச்சாட்டு: “மத்திய கிழக்கில் தற்போதைய பதற்றத்துக்கு காரணமே ஈரான் தான். அணு ஆயுதங்களை தயாரித்து இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிடுகிறது. அதனால்தான் நாங்கள் அணு ஆயுதத் தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தினோம். ஆனால், இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது” என்று இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடாவ் ஷோசானி தெரிவித்தார்.

அதேவேளையில், ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, “இஸ்ரேலுடன் போரிட ஈரான் ராணுவப் படைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரான் மக்கள் அனைவரும் ஈரான் ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளனர்” என்றார். மேலும், இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வழங்கினால், ஈரானில் உள்ள அந்த மூன்று நாடுகளின் நிலைகள் மீதும் குறிவைத்து தாக்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இந்தப் பின்னணியில், “ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடரும் பட்சத்தில், அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரான் பற்றியெரியும்” என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X