2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஒரு மாதம் ’’புழு’’ வாந்தி எடுத்த சிறுமி: பெற்றோரே உஷார்

Editorial   / 2025 ஜூன் 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமி ஒருவருக்குத் திடீரென வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தச் சிறுமி திடீரென உயிருடன் உள்ள புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளார். அதுவும் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இதுபோன்ற புழு வாந்தி எடுத்துள்ளார். மருத்துவர்கள் அந்தச் சிறுமியைப் பரிசோதனை செய்த போது அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம், சீனாவில் இடம்பெற்றுள்ளது,

இந்தக் காலத்தில் நாம் கனவிலும் யோசிக்காத பல்வேறு வகையான நோய்ப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாகக் கொரோனாவுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் பெரியளவில் கவனத்தைப் பெறுகிறது. ஏனென்றால் ஒரு கொரோனாவே உயிரிழப்புகள் + பொருளாதார இழப்புகள் என மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மீண்டும் ஒரு பெருந்தொற்றை உலகம் தாங்காது.

இதற்கிடையே சீனாவில் மிக வினோதமான அதேநேரம் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது சீனாவில் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த யாங்சோ நகரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி திடீரென உயிருள்ள புழுக்களை வாந்தி எடுத்துள்ளார். அதுவும் ஏதோ ஒரு முறை மட்டும் வாந்தி எடுக்கவில்லை. அவர் ஒரு மாதத்திற்கு மேலாகவே தொடர்ச்சியாக இதுபோல உயிருள்ள புழுக்களை வாந்தி எடுத்து வந்துள்ளார்.

அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இருப்பினும், முதலில் என்ன பாதிப்பு என்பது தெரியவில்லை. தீவிரப் பரிசோதனையில் தான் அந்தச் சிறுமியின் உடல்நலக் குறைவுக்குக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதாவது வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் வடிகால் ஈக்கள் (drain flies) காரணமாகவே அந்தச் சிறுமிக்கு இந்தளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. வீடுகளில் பொதுவாக ஈரப்பதம் அதிகம் இருக்கும் இடங்களில் இருக்கும் இந்த வகை ஈக்களை அந்துப்பூச்சி ஈக்கள் என்றும் குறிப்பிடுவார்கள்.

அந்தச் சிறுமி ஒவ்வொரு முறையும் சுமார் 1 சென்டிமீட்டர் நீளமுள்ள உயிருள்ள புழுக்கள் வாந்தியாக எடுத்துள்ளார்.. தீவிரமான புழுத் தொற்று ஏற்பட்டதாலேயே அவருக்கு இதுபோல வாந்தி வந்துள்ளது. அதேநேரம் அந்தச் சிறுமிக்கு மட்டுமே இதுபோல ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர் உட்படக் குடும்பத்தினர் உடனேயே இருந்தாலும் கூட அவர்களுக்கு இதுபோல எந்தவொரு பாதிப்பும் இல்லை. அவர்கள் நலமாகவே இருந்தனர். இதனால் இந்தத் தொற்று பரவக்கூடியது அல்ல என்பது தெரியவந்தது.


அவரது பெற்றோருக்கு முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதலில் அவர்கள் பல்வேறு மருத்துவர்களிடமும் சென்றுள்ளனர். இருப்பினும் தீர்வு கிடைக்கவில்லை. கடைசியாக அவர்கள் ஜியாங்சுவிலுள்ள சூசோவ் பல்கலைக்கழகக் குழந்தைகள் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் மாதிரிகள் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகே அந்தச் சிறுமிக்கு என்ன பாதிப்பு என்பது தெரிய வந்துள்ளது.

 அந்துப்பூச்சி ஈக்கள் என்பது மிகச் சிறிய வகைப் பூச்சிகள். அவை இதய வடிவிலான தனித்துவமான இறக்கைகளைக் கொண்டிருக்கும். பொதுவாக வடிகால்கள் போன்ற சூழலில் இவை செழித்து வளரும். அந்தப் பூச்சிகள் சிறுமி புழு வாந்தி எடுக்கக் காரணமாக இருந்துள்ளது. இது குறித்து நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கூறுகையில், "வடிகால் ஈக்களின் லார்வாக்கள் நிலத்தடி நீரில் கலந்திருக்கலாம். சிறுமி பல் துலக்கும்போது அல்லது கழிப்பறையை யூஸ் செய்யும் போது,​​அது உடலில் புகுந்து இருக்கும். அதுவே இந்தப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.


ஈக்கள் ரத்தம் மூலம் நோய்களைப் பரப்புவதில்லை. இருப்பினும் அவை மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குடல் அடைப்பு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை கூட ஏற்படலாம். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கூட பாதிக்கலாம். எனவே, வீட்டைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது நம் பொறுப்பு!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X