2026 மார்ச் 12, வியாழக்கிழமை

போர் பதற்றத்தில் புதிய திருப்பம்

S.Renuka   / 2026 மார்ச் 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர மூன்று முக்கிய நிபந்தனைகளை அவர் முன்வைத்ததுடன், வளைகுடா அரபு நாடுகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து புதன்கிழமை (11) இரவு சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போரின் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் அல்லது ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க உறுதியான சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்களும் தேவை என தெஹ்ரான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போது பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி, ஈரானின் உரிமைகளை அங்கீகரிப்பதும், ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், எதிர்கால தாக்குதல்களுக்கு எதிரான வலுவான சர்வதேச உத்தரவாதங்களை ஏற்படுத்துவதுமே என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 'ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள்' என்றால் என்ன என்பதை அவர் விரிவாக விளக்கவில்லை என்றாலும், அமைதியான அணுசக்தி திட்டங்களை உருவாக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த திட்டம் அணு ஆயுத உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம் என்று குற்றம் சாட்டி வருகின்றன.இந்நிலையில், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், இந்த மோதல் இன்று வியாழக்கிழமை (12) 13ஆவது நாளை எட்டியுள்ளது.

பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் பதற்றமடைந்து வருவது சர்வதேச அளவில் கவலை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .