Editorial / 2025 ஜூலை 14 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பொன்ஜீன் வீதிக்குப் பெருமை சேர்த்த பெரும் நிகழ்வு அண்மையில் கொட்டாஞ்சேனையில் நடந்தேறியது. கொட்டாஞ்சேனையில் மட்டுமல்ல , இலங்கைவாழ் கத்தோலிக்க சமூகம் அனைத்துமே கொண்டாடி மகிழ்ந்த திருநாளாக இப்புதிய பெயர் மாற்றம் நிகழ்ந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது.
இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர் மறைமாவட்டம் பேராயரும் கர்தினாலுமான மால்கம் ரஞ்சித், சென்ற ஜூன் மாதம் 30 ஆம் திகதி, பேராயர் பொன்ஜீன் வீதி என்ற புதிய வீதியின் நாமம் தாங்கிய புனிதரின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
கொட்டாஞ்சேனை மக்கள் மாத்திரமல்ல, இலங்கையின் கத்தோலிக்க சமூகம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. கொட்டாஞ்சேனை கிழக்கு மாநகர சபை உறுப்பினராகப் புதிதாகப் பதவியேற்ற, துரித கதியில் இப்புதிய பெயர் மாற்றத்தை சாதித்து முடித்த காயத்ரி விக்கிரமசிங்க. இலங்கை வாழ் கத்தோலிக்க சமூகத்தவர்களின் பெரும் அபிமானத்தை சம்பாதித்திருக்கிறார். வெறும் பொன்ஜீன் வீதி என்றிருந்த பெயரை பேராயர் பொன்ஜீன் வீதி என்று மாற்றப்பட வேண்டும் என்று பல வருட காலமாக அருட்தந்தை ரொணி விக்ரம சிங்கவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்ததாயினும், காயத்திரி விக்கிரமசிங்க முழு மூச்சாக நின்று, பெயர்ப்பலகை மாற்றத்தைச் சாதித்துக் காட்டியுள்ளார்.
இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்ட கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி பல்தசார் நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த கத்தோலிக்க சபையின் அருட்தந்தை, பேராயர் இல்ல குருமார்களுக்கு காயத்திரியை அறிமுகம் செய்து வைத்து புகழாரம் சூட்டினார்.
பிரெஞ்சுப் பாதிரியாரான கிறிஸ்டோபர் ஏர்னஸ்ட் பொன்ஜீன் (1823- 1892) கத்தோலிக்க திருச்சபையின் துறவற சபையான 'மேரி அமலாவின் ஒப்லேட்கள் ' என்ற சபையில் கிறிஸ்தவ பணியாற்றிய பெருமகனாவார்.
பத்தொன்பது வயதிலேயே இறைபணியில் இணைந்து கொண்ட பொன்ஜீன் அடிகளார் தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஒன்பது ஆண்டுகள் சேவையாற்றி புனிதராவார். பின் 1856 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இறை பணியாற்றச் சென்று,இருபத்தேழு ஆண்டுகள் சேவைக்கு பின்,கொழும்பிற்கு மாற்றப்பட்டார். யாழ்ப்பாணத்தில் Jaffna Catholic Guardian என்ற பத்திரிகையையும் அடிகளாரே ஆரம்பித்துவைத்தார்.
கொழும்பின் முதலாவது பேராயராக பொன்ஜீன் அடிகளார் 1886 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டு, இலங்கை கத்தோலிக்க சமூகத்தின் வரலாற்று நாயகனாக மிளிர்ந்தார். கத்தோலிக்க சமயம் சார்ந்த பாடசாலைகளுக்கு வித்திட்ட கல்வி பெருமகனாக பொன்ஜீன் திகழ்ந்தார். கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு அரசு உதவ வேண்டும் என்று பொன்ஜீன் அடிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று , 1869 ஆம் ஆண்டில் அரசு கத்தோலிக்கக் குழந்தைகளுக்குப் பாடசாலைகள் நிறுவப்படலாம் என்றும், அரசு அதற்கு நிதி நல்கும் என்று அறிக்கையிட்டது .
கொழும்பில் 1892 இல் பொன்ஜீன் அடிகளார் இன்றும் புகழ் பூத்த கல்லூரியாக விளங்கும் மருதானை சென்ட்.ஜோசப் கல்லூரியை ஆரம்பித்தபோது , கத்தோலிக்கக் கல்வி வரலாற்றில் அது புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. ஆரம்பத்திலேயே 300 மாணவர்களோடு ஆரம்பித்த இக்கல்லூரி வெகுவிரைவில் முன்னணிக் கல்லூரியாக புகழ் பெற்றது. ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பல ஆரம்பப் பாடசாலைகளை அடிகளார் நிறுவிச் சென்றார். கத்தோலிக்க இறைபணிக்கு மதகுருமார்களின் தேவையை உணர்ந்து, பொரளையில் சென்ட் பெர்னார்ட் திருச்சபை செமினரியை உருவாக்கிய பெருமையும் பேராயர் பொன்ஜீன் அடிகளாரையே சாரும்.
1892 ஆம் ஆண்டில் தனது 69 வது வயதில் பேராயர் பொன்ஜீன் அடிகளார் கொழும்பில் மறைந்தபோது , பெருமைமிக்க கத்தோலிக்க முதுசத்தை அவர் விட்டுச் சென்றிருந்தார்.
இந்தப் புனிதப் பணிக்கு உறுதுணையாக இருந்த மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் , மாநகர சபை ஆணையாளர் பாலித்த நாணயக்கார ஆகியோருக்கு அருட்தந்தை ரொனி விக்கிரமசிங்க தனது ஆசீர்வாதத்தையும் நன்றியையும் தெரிவித்தார்.









பேராயர் பொன்ஜீன் பெயர் பலகை மாற்றத்துக்கு காயத்திரியே காரணம்
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago