2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூரில் 'தமிழ் மொழி விழா'

Thipaan   / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சௌந்தரநாயகி வயிரவன், சிங்கப்பூர்

சிங்கப்பூர் என்றாலே, அதன் நவீனமும் பிரமிப்பான தோற்றமுமே ஒருவர் மனதில் எழும். குதூகலத்துக்;கும் கொண்டாட்டத்துக்கும் இங்கு குறைவு  இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால், அந்த நவீனத்துக்கு இடையிலும், தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் ஓர் உயரிய இடம் உண்டு என்பதை எத்தனை பேர் அறிவர், அதுவும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவியுடனும் ஊக்கத்துடனும்?

தமிழர்கள், இன்று உலகெங்கிலும் வாழ்கின்றனர். ஆனால், சில நாடுகளில் தான் தமிழர்கள், தமிழோடும், தமிழ்க் கலாசாரத்துடனும் வாழ்கின்றனர். அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாடுகளில், சிங்கப்பூர் ஒன்று. 

அதற்கு முக்கிய காரணம், சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில், தமிழும் ஒன்று. சிங்கப்பூரில், ஒருவர் தம் பண்பாடு மறவாமல் வாழ்வதற்கு, தம் தாய் மொழியின் தொன்மையை அறிந்திருப்பது இன்றியமையாதது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

1819ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர்/ மலாயா பகுதிகளில், தமிழர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு கூறுகிறது.  அன்று தொட்டு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்கள் தங்கள் பங்கை ஆற்றிவருகிறார்கள். சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம், கலை, கலாசாரம் பல பரிமாணங்களில் வளர்ந்து கொண்டு வருகிறது.

2000ஆம் ஆண்டு தகவல் கலைகள் அமைச்சகத்தின் கீழ், 'வளர் தமிழ் இயக்கம்' எனும் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தமிழை மேலும் வளர்க்கவும் தமிழை, மக்களிடத்தில் வாழ்வியல் சார்ந்த  மொழியாக ஆக்கும் நோக்கிலும், குறிப்பாக இளைஞர்கள், அரசாங்கத்துடனும் சமூக அமைப்புகளுடனும் தங்கள் உறவை வலுப்படுத்தவும், இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு முதல், இவ்வமைப்பின் ஆதரவுடன்; ஏப்ரல் மாதத்தில் தமிழ் மொழி விழா, சிங்கப்பூரில்  கொண்டாடப்பட்டு வருகிறது. 

'தமிழில் பேசுவோம், தமிழை நேசிப்போம்' என்ற முழக்கவரியைக் கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டுத் தமிழ் மொழி விழாவை, சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்

எஸ். ஈஸ்வரன், ஏப்ரல் 2ஆம் திகதி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். 

ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் சார்ந்த 42 சுவையான நிகழ்ச்சிகள், அனைத்து வயதினருக்கும், தரப்பினருக்கும் வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 40 இணை ஏற்பாட்டாளர்களால் நடத்தப்படுகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 'நீயா, நானா?' நிகழ்ச்சியை வழிநடத்தும் கோபிநாத், பிரபல பத்திரிகையாளர் மாலன், திரை இயக்குநர் கரு பழனியப்பன் போன்றோர் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவிருக்கும் சில பிரமுகர்கள்.

லிக்ஷா பெண்கள் பிரிவு நடத்திய 'தமிழர் உணவும் பாரம்பரியமும்' என்ற நிகழ்ச்சியில், வாழையிலையில் உணவு பரிமாறுவது போன்ற, மறைந்து வரும் தமிழ் பாரம்பரியக் கூறுகள் எடுத்துக் கூறப்பட்டன.

பள்ளி மாணவர்கள் தங்களின் விவாதிக்கும் திறணை மெருகூட்ட 'சொற்களம்' எனும் நிகழ்ச்சி வழிவகுக்கிறது. 

மாணவர்களைக் கதை சொல்ல ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், கலையார்வத்தைத் தூண்டக் கூடிய நிகழ்ச்சிகள்; சிந்திக்கவைக்கும் சொற்பொழிவுகள், மூத்த எழுத்தாளர்களுடனான இலக்கிய கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என 'இயல், இசை, நாடகம்' என முத்தமிழுக்கும், சிங்கப்பூர் ஒரு மாத காலம் விழா எடுத்து, பத்தாவது ஆண்டாகக் 'தமிழ் மொழி விழா'வைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 

தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்துக்கு ஏற்றாற்போன்ற நிகழ்ச்சிகளாக,'மின்னியல் தமிழ் - புத்தாக்க உத்திகளும் எதார்த்த விளைவுகளும்' தமிழ் இணையக் கருத்தரங்கம், சிங்கப்பூர் தமிழ் இணையத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்கள் - ஓர் ஆய்வு போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

மக்களை 'தொழில் முனைவர்களாக ஊக்குவிக்க, தொழில் தொடங்குவதும் நிதி ஆலோசனைகளும்' போன்ற நிகழ்ச்சி உதவும்.

ஆக தமிழை மக்களிடத்தில் வாழ்வியல் சார்ந்த மொழியாக ஆக்கும் வளர் தமிழ் அமைப்பின் நோக்கம், நடைமுறைக்கு ஏற்புடைய அதன் நிகழ்ச்சிகள் மூலம் பிரதிபலிக்கின்றது.

'தமிழ் மொழி விழா' மக்களிடம் சென்ற அடைந்து வெற்றிக் கண்டிருப்பதற்கு, ஒரு (எ-க) நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்னர் பங்கு பற்றிய மாணவர்கள், தமிழ் மீது ஆர்வம் கொண்டு, இவ்வருடம் நிகழ்ச்சிப் படைப்பாளர்களாக உருவாகி இருக்கிறார்கள் என்பதுதான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X