2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எல்லாம் இன்ப மயம்!

Menaka Mookandi   / 2015 ஜூன் 09 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

               

                தீண்டினால் இன்பம் தீண்டாத போது
                    தீயினைத் தீண்டாதிருப்பது இன்பம்.
                வேண்டினால் இன்பம் வேண்டாத போது
                    வேதனைக்குள் வீழாதிருப்பது இன்பம்.
                தூண்டினால் இன்பம் தூண்டாத போது
                    தூர விலகியிருப்பது இன்பம்.
                மாண்டாலும் இன்பம் வாழும் போதுதான்
                    மானிடனே மகத்தான இன்பம்.

                தொடுவதும் இன்பம் தொட்டவை யாவுமே
                    தொடர்வதைத் தடுப்பதும் இன்பம்.
                நடுவதும் இன்பம் நட்டவை யாவுமே
                    நன்மை பயப்பதும் இன்பம்.
                படுவதும் இன்பம் பட்டபின் பெற்றிட்ட
                    பக்குவ ஞானமும் இன்பம்.
                விடுவதும் இன்பம் விட்டபின் வாழ்வின்
                    வித்தையை விளக்குதல் இன்பம். 

                மனமிருந்தால் இன்பம் இல்லாத போது
                    மனதடக்கி வாழ்தலும் இன்பம்.
                குணமிருந்தால் இன்பம் இல்லாத போது
                    குறைகளைக் களைவதும் இன்பம்.
                கணமேனும் வாழ்வை விழிப்போடு வாழ்ந்து
                    கனவினை விரட்டுதல் இன்பம்.
                பிணமாகு முன்பு பிறப்பின் இரகசியம்
                    பிழையின்றி அறிந்திடல் இன்பம். 

                வெல்லுதல் இன்பம் வெற்றியின் வீம்பில்ஜ
                    வேதனை வேண்டாதிருத்தல் இன்பம்.
                தோல்வியில் இன்பம் தோற்றிட்ட வேளை
                    துன்பத்தில் துவளாதிருத்தல் இன்பம்.
                சொல்லுதல் இன்பம் சொன்னது போலவே
                    சுத்தமாய்த் துலங்குதல் இன்பம்.
                நல்குதல் இன்பம் நல்கிய யாவையும்
                    நமக்கினி இல்லை என்பது பேரின்பம்.

                கற்றிடல் இன்பம் கற்றவை யாவையும்
                    கலைகளாய்க் காண்பதும் இன்பம்.
                பற்றுதல் இன்பம் பற்றிய யாவையும்
                    பற்றின்றி விற்றிடல் இன்பம்.
                பெற்றிடல் இன்பம் பெற்றவை யாவையும்
                    பகிர்ந்திடல் தரும் பேரின்பம்.
                சற்றுநில் மானிடா சகலமும் சுட்டபின்
                    சிதையினுள் போவதும் இன்பம்.
ஜெயசீலன்
கண்டி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .