2025 ஜூன் 21, சனிக்கிழமை

“ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்”

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

ஊடகவியலாளர்கள் சமூகத்தில் கௌரவமான பொறுப்பைச் சுமந்தவர்கள். அவர்கள் தமது பொறுப்பையும் கடமையையும் சமூகத்தின் எதிர்காலம் நோக்கியதாக முன்னெடுக்க வேண்டும் என இலங்கை இராணுவத்தின் ஊடகத்துறை ஆலோசகர் டி.பி.சிசிர குமார விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்க புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக இலங்கை இராணுவத்தின் 24ஆவது படைப்பிரிவு மற்றும் இளைஞர் தன்னார்வக் குழு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு நாள் செயலமர்வு 24ஆவது இராணுவ படை பிரிவின் அம்பாறை - மல்வத்தை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றுள்ளது.

இந்த செயலமர்வில் இலங்கை இராணுவத்தின் ஊடக ஆலோசகர் டி.பி.சிசிர குமார விஜயசிங்க கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இங்கு விளக்கமளிக்கையில்,

இராணுவத்தினருக்கு இந்த நாட்டை பாதுகாப்பதற்கும் அவர்களுடைய கடமையைச் செய்வதற்கு எவ்வாறு பொறுப்புக்கள் இருக்கிறதோ அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கு இந்த நாட்டை பாதுகாப்பதற்கும் அவர்களுடைய கடமையை செய்வதற்கும் பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால், இன்று சில ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் அரசியல் சார்ந்தவர்களால் வாங்கப்படுகின்ற துர்ப்பாக்கியமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

சிலர் மக்களைத் திசை திருப்பும் வகையில், பிழையான அல்லது பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இறுதி யுத்தத்தின் போது சிலர் வெவ்வேறு நாடுகளில் இருந்து ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டையுடன் வந்து, யுத்தம் நடைபெறுகின்ற பகுதிகளுக்குள் சென்று பயங்கரவாதிகளுக்கு தகவல்கள் கொடுப்பவர்களாகச் செயல்பட்டதன் காரணமாக நாம் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதியை வழங்கி இருந்தோம்.

நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்தினருக்குண்டு. இராணுவத்தினருடன் இணைந்து நாட்டை பாதுகாக்கின்ற பொறுப்பில் ஊடகவியலாளர்கள் பணியாற்ற வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு இராணுவத்தினரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த செயலமர்வில் இளைஞர் தன்னார்வ குழு ஸ்தாபகர் நாசிறூன் சுலைமான், இராணுவ ஊடக பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .