Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 மே 13 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை விட சற்று மாறுபட்டதொரு எண்ணப்பாட்டை உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக
மக்கள் உட்கிடையாக வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிகின்றது.
அந்த வகையில். தமிழ், முஸ்லிம்,மலையகக் கட்சிகளுக்கும் கொழும்பில் அரசியல் செய்யும் சிறுபான்மை அணிகளுக்கும் மட்டுமன்றி; தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பெருந்தேசியக் கட்சிகளும் ‘தேர்தல் முடிவுகள்’ என்ற இந்தப் புள்ளி விபரங்களை ஆராய்ந்தறிந்து சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
முதலாவது விடயம், நாடுபூராகவும் அரைவாசிக்கு அதிகமான சபைகளில் எந்தவொரு கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆளுக்காள் வசைபாடி, மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பிரித்து அரசியல் செய்தவர்கள் இப்போது இணைந்து ஆட்சியமைப்பதாக,
‘டீல்’ பேசத் தொடங்கியுள்ளார்.
எதிரணியையும் அதன் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக வரவுள்ளவர்களையும் ‘கள்வர்கள்’ என்று கூறிய என்.பி.பி. கட்சி, யாருடனும் இணைந்து ஆட்சியமைக்க மாட்டோம் என்று கூறி வந்தது. இப்போது அவற்றில் உள்ள நல்லவர்கள், முற்போக்கானவர்களை இணைப்பது
பற்றிச் சிந்திக்கின்றது.
மறுபுறத்தில், ஆளும் கட்சியை ‘பொய்யர்கள்’ என்று இன்று வரை கூறி வருகின்ற எதிரணிக் கட்சிகள் பல இடங்களில் வாய்ப்புக் கிடைத்தால் இணைந்து செயற்படத் தயங்காது என்பதே யதார்த்தமாகும். பாவம், வழக்கம்போல அரசியல் அணிகளின் பிரித்தாளும் அரசியலால் ஏமாந்தது அப்பாவி மக்கள்தான்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கம் கனவு கண்டது மாதிரி அமையவில்லை. ‘நாங்கள்தான் முஸ்லிம் கட்சி,’ ‘நாங்கள்தான் தமிழ்க் கட்சி’ என்று என்.பி.பி. கூறி வந்தாலும், வடக்கு கிழக்கில் கணிசமான மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் உண்மையான தனித்துவ முஸ்லிம், தமிழ்க் கட்சிகளுக்கே முன்னுரிமை வழங்கியிருக்கின்றார்கள்.
இந்த தேர்தலில் வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற தனித்துவ அடையாள முஸ்லிம் கட்சிகளுக்கே கணிசமான வாக்குகளை அளித்திருக்கின்றார்கள்.
அதேபோல், தமிழ்ப் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி அநேக சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி, அ.இ.தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளும் சில சபைகளில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.
மலையகத்தைப் பொறுத்தமட்டில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இரு சபைகளைத் தனதாக்கியுள்ளது. இதுதவிர, ஒரு சில தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்ட குழுக்களும் கொடி நாட்டியுள்ளன.
ஆகவே, இந்த மக்கள் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார்கள். அதாவது,
அனுரகுமார நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அதில் மாற்றமில்லை. பாராளுமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தோம்.
அதிலும் தயக்கமில்லை.ஆனால், இது உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல். சிறுபான்மைப் பிரதேசங்களைப் பெரும்பான்மைக் கட்சிகள் ஆள்வதை விட, எம்மை நாமே, நமது கட்சிகளே ஆள்வதே ஒப்பீட்டளவில் சிறந்தது என்று இப்போது நாங்கள் நினைக்கின்றோம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளார்கள்.
உண்மையில், இதற்கு முந்திய உள்ளூராட்சி சபைகளில் ஜே.வி.வி. அல்லது என்.பி.பியின் செல்வாக்கு 5 சதவீதம் அளவிலேயே இருந்தது. இப்போது கிட்டத்தட்ட 40 சதவீதமாகியுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் சபைகளை என்.பி.பியினால் வெற்றி கொள்ள முடியாது போனாலும் பெரும்பாலான சபைகளில் அக்கட்சியின் பல உறுப்பினர்கள் (முதன்முதலாக) தெரிவாகியுள்ளனர்.
சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலாவது தங்களது முஸ்லிம், தமிழ் கட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்து அழகு பார்க்காமல், தம்மைத் தாமே ஆளும் ஒரு அதிகார மையத்தை உருவாக்காமல், உள்ளூராட்சி சபை தேர்தல்களிலும்
முஸ்லிம், தமிழ் மக்கள் பெரும்பான்மைக் கட்சிக்கு ஆணை வழங்குவார்கள்
என்று நம்ப முடியாது.
ஆனால் ஒன்று, உள்ளூராட்சித் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இது
ஆளும் கட்சிக்குத் தோல்வி இல்லை என்றாலும், பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஆறு மாதங்களுக்குள் நாடுபூராகவும் உள்ள மூவினங்களையும் சேர்ந்த இத்தனை இலட்சம் மக்கள் என்.பி.பி. விட வேறு ஒரு கட்சிக்கு முன்னுரிமை வழங்கியதற்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் ஆராயவே வேண்டும்.
தமக்குரிய சொந்த அரசியல் அணிகள் மீண்டெழுவதற்கான ஒரு வாய்ப்பை வடக்கு, கிழக்கில் சிறுபான்மைச் சமூகங்கள் வழங்கியிருக்கின்றன, அவை ஆளும் தரப்பின் வாக்கில் குறைவை ஏற்படுத்தியிருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும், அதற்கும் அப்பால் நாடுபூராகவும் 23 இலட்சம் வாக்குகள் எப்படிக் குறைந்தன என்பதற்கான காரணங்கள் அவ்வளவு இரகசியமானவை அல்ல.
மூவின மக்களினதும் நம்பிக்கை நட்சத்திரமாக அனுரகுமார இருந்தார், இன்னும் இருக்கின்றார். ஜனாதிபதிக்காகவே என்.பி.பிக்கு நாட்டு மக்கள் திரண்டு வாக்களித்தனர். ஆனால், கடந்த ஐந்தாறு மாதங்களில் ஒரு சில முற்போக்கான நகர்வுகளை அரசாங்கம் செய்திருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது. ஆளும் கட்சி சொன்னவற்றை எல்லாம் செயலில் காட்டவில்லை.
முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சு கொடுக்காமல் அதற்கு கடுந்தொனியில் வியாக்கியானம் கொடுத்தது முதற்கொண்டு, குரங்குக் கதைகள், சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகள் தொட்டு, கொழும்பில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி விடயத்தில் நடந்து கொண்டது வரை, பல விடயங்களில் அரசாங்கம் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நாட்டை வினைத் திறனாகவும், ஏற்கனவே ஜே.வி.பியும் என்.பி.பியும் வாக்குறுதி அளித்ததன் படியும் முன்கொண்டு செல்ல முடியாமல் போனது ஒருபுறமிருக்க, அமைச்சர்கள் மற்றும் என்.பி.பி. எம்.பிக்களின் செயற்பாடுகளும் எதிர்வினை அறியாத அறிக்கைகளும், ‘படித்தவர்களின் அரசாங்கம்’ என்ற அடைமொழியை கேலிக்குள்ளாக்கியுள்ளது.
இப்படிப் பல விடயங்கள் இவ்வாறு வாக்குகள் குறைந்ததற்குக் காரணமாக அமைந்தன எனலாம். அதாவது பாராளுமன்ற தேர்தல் காலத்தில் மக்கள் மனங்களில் எந்த இடத்தில் என்.பி.பியை வைத்திருந்தார்களோ, அந்த இடத்தில் தொடர்ந்தும் வைத்திருக்க முடியுமா என்று மக்கள் மீளச் சிந்திக்கின்றார்கள் என்றும், இந்த தேர்தல் முடிவுகளைக் கருத முடியும்.
இதனையெல்லாம் மீறி அரசாங்கம் எதிர்பார்த்தது போல 68 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்க வேண்டுமென்றால், அதற்காக 159 பேரும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். ‘பொய்க் கதைகள்’ கூறுகின்றார்கள் என்று விமர்சனங்கள் எழுமளவுக்கு நிலைமைகள் கேலிக்கூத்தாகச் செல்வதற்கு இடமளித்திருக்கக் கூடாது.
குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்கள் தமக்கே வாக்களித்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. உண்மையான நல்லெண்ணத்தை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆளும் தரப்பின் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது
கட்சி சொல்வதை மட்டுமே செய்யாமல், தங்களது சமூகத்தின் குரல்களுக்கும் செவிசாய்த்திருக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள என்.பி.பி.யின் தமிழ் எம்.பிக்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் றிசாட் புகாரி என்பவருக்குத் தேசியப் பட்டியல் எம்.பி. பதவி கிடைக்கலாம் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் அப் பதவியைப் பெற்றுக் கொண்ட ஆதம்பாவா எம்.பி. போன்றோர், இன்னும் தீயாக அடிமட்ட மக்களுக்குள் இறங்கி வேலை செய்திருக்க வேண்டும்.
ஆனால், அப்படியான அபூர்வங்கள் எதுவும் நடக்கவில்லை. மாறாக ஆளும் தரப்பின் எம்.பிக்கள் மட்டுமன்றி, சில உள்ளூர் செயற்பாட்டாளர்களும் அதிமேதாவித்தன வேலைகளைப் பார்த்து, இருந்த வாக்குகளையும் கெடுத்துக் கொண்டார்கள்.
இதுவெல்லாம் நடக்காமல், அரசாங்கம் பொருளாதார, சமூக ரீதியாக விடயங்களைச் சாதித்துக் காட்டியிருந்தால், என்.பி.பி. எம்.பிகள் தாங்கள் உண்மையிலேயே புத்திசாலிகள், திறமைசாலிகள், சேவை செய்யக் கூடியவர்கள் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபித்து காட்டியிருந்தால், உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி அமைந்திருக்கலாம்.
பொதுவாக, நாட்டு மக்கள் என்ற அடிப்படையிலும், குறிப்பாக, தமிழர்கள், முஸ்லிம்கள் விடயத்திலும் எங்குத் தவறு நடந்துள்ளது என்பதை, எல்லா விடயங்களையும் ஆராய்ந்தறியும் ஆற்றல் பெற்ற அரச மேலிடம் விளங்கிக் கொள்ள வேண்டும். உள்ளுக்குள் பல மாற்றங்களைச் செய்தால் எதிர்காலத்தில் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கலாம்.
மறுபுறத்தில், சிறுபான்மைக் கட்சிகள் இந்த தேர்தல் முடிவுகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் பல முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளைத் தோற்கடித்து சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாடம் புகட்டிய முஸ்லிம்களும் தமிழர்களும், உள்ளூராட்சி மன்றங்களில் தமது சொந்த அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கியிருக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகளும், தமிழப் பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகளுக்கும் வெற்றியை மக்கள் வழங்கியிருப்பது ஒரு செய்தியாகும். தமக்கான சொந்த அரசியல் தேவை என்ற அவர்களது உணர்வை இது வெளிப்படுத்துகின்றது.
இதனைப் புரிந்து கொண்டு,
தமக்கான அரசியலை அடிமட்டத்தில் இருந்து மீளக் கட்டியெழுப்ப குறிப்பாக முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் நடவடிக்கை எடுத்தால், எதிர்காலத்தில் விமோசனம் உண்டு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago