Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 24 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அந்நாட்டை இஸ்ரேல் வலிய வம்புக்கு இழுத்ததைத் தொடர்ந்து, நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் அநாவசியமாக அமெரிக்கா உள்நுழைந்ததன் விளைவாக, இது ஒரு உலக யுத்தத்திற்கு வழிகோலுமா என்ற அச்சம் மக்களிடையே இன்று ஏற்பட்டிருக்கின்றது.
இஸ்ரேலின் மேலாதிக்க சிந்தனைக்கு முட்டுக் கொடுக்கும் அமெரிக்காவுடன் அநியாயத்தின் கூட்டாளிகளான வேறு சில நாடுகளும் இணையுமா என்பதிலும், ஈரானுடன் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கைகோர்க்குமா என்பதிலுமே இந்தப் போர் எந்தளவுக்கு விரிவடையும் என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.
நாடற்றவர்களாகத் திரிந்த யூதர்களுக்குக் குடியேறுவதற்கு இடங்கொடுத்த பலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்துக் கொண்டு பூர்வீக மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் காசாவில் இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையும். உலகின் பலம் குறைந்த நாடுகளுக்கு ஜனநாயகம், மனித உரிமைகள், போர்க் குற்றங்கள் பற்றி பாடம் கற்பிக்கின்ற அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் இதற்கு ஒன்றில் ஒத்துழைப்பு வழங்குகின்றன அல்லது கண்டும் காணாது போல் இருக்கின்றன.
ஈராக், சிரியா, டியூனிசியா, லிபியா, லெபனான், துருக்கி என ஏகப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் நேச நாடுகளும் வருடக் கணக்காகச் சண்டித்தனம் காட்டி வருகின்றன. குறிப்பாக இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களும் அங்குள்ள
வளங்களும் இலக்கு வைக்கப்பட்டன. நிராயுத பாணிகளைக் கொன்று விட்டு ‘வெற்றி’ என்று அறிக்கை விடுகின்ற வேலைகளும் நடக்கின்றன.
மேற்குலக ஊடகங்கள் சொல்கின்ற சோடிக்கப்பட்ட செய்திகளைத்தான் மக்கள் நம்புவார்கள் என்றிருந்த காலம் வரை இந்த வித்தைகள் எல்லாம் பலித்தன. இன்று நவீன ஊடகங்கள் வந்து விட்டன. பொய்ச் செய்தி தயாரிக்கப்படுவதற்கு முன்னரே களத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு வந்து விடுகின்றது. இது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது.
குறிப்பாக, பலஸ்தீன விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். பலஸ்தீன மக்கள் போராடுவது அவர்களது சொந்த நிலத்திற்காக ஆகும். நிராயுதபாணியான பலஸ்தீன மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனா, கொல்லப்படுகின்றனர். பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களை அழிப்பதை ஒரு வேலையாக அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் படைகள் செய்து வருகின்றன.
‘90 சதவீதமான யூதர்களை நான் கொன்று விட்டேன். மீதமுள்ள 10 சதவீதமானவர்களைப் பார்த்து ஏன்? இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று உலகம் கண்டுகொள்ளட்டும் என அவர்களை விட்டு வைக்கின்றேன்’ என்று ஹிட்லர் சொன்னது இப்போதெல்லாம் அடிக்கடி ஞாபகத்திற்கு வருவதுண்டு.
பலஸ்தீனத்தில் உணவு, குடிநீர், தங்குமிடம், மருந்துகள் என எந்தவொரு அடிப்படைத் தேவையையும் மறுத்து, பசியோடு கையில் எதுவுமின்றி நின்ற மக்களைக் கொன்று விட்டு, நாங்கள் தைரியசாலிகள் என்று அவர்கள்
கூறியதை உலகம் பார்த்தது.
ஆனால், அமெரிக்காவால், இஸ்ரேலால், இவர்களுக்குப் பின்னால் நிற்கும் வேறு சில நாடுகளால் இதனை உலக மக்களுக்கு மறைக்க முடியாத நிலை இப்போது
உருவாகி விட்டது.
இப்போது, பலஸ்தீன மக்களுக்காக மட்டுமன்றி, காட்டுமிராண்டிகளினால் அநியாயமாகக் கொல்லப்படும் எல்லா துணிந்து குரல் கொடுக்கும் மக்களின் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்துள்ளது.
ஐ.நாவில் ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜெனிவாவில், ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் கணிசமான அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் நியாயத்திற்காக நெஞ்சை நிமிர்த்திப் பேசுகின்றார்கள். ஏன் அமெரிக்காவில் பல செயற்பாட்டாளர்கள் அரசின் போக்குகளை எதிர்க்கின்றார்கள்.
சமகாலத்தில் உலக ஒழுங்கு மெல்ல மெல்ல மாறி வருகின்றது. இன்னும் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், அதற்கு கிட்டத்தட்ட சமமாக ரஷ்யா, சீனா, கொரியா எனப் பல நாடுகள் பல நாடுகள் முன்னெறி வருகின்றன. பல ஆண்டுகள் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரானின் பெரு வளர்ச்சி கண்டு உலகமே திகைத்து நிற்கின்றது.
பல அரபு நாடுகள் பொருளாதார ரீதியாகவும் ஏனைய அடிப்படைகளிலும் முன்னேறியிருக்கின்றன. ஆனால், முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமை இன்மையும், சில நாடுகள் வொஷிங்டனுடனான திரைமறைவு உறவுகளைப் பேணுவதற்காக, முஸ்லிம்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதும்தான் இத்தனை அழிவுகளுக்கும் வித்திட்டுள்ளது எனலாம்.
இன்னுமொரு உலக மகா யுத்தம் உருவாகி விடக் கூடாது என்ற நோக்கத்தில் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. ஆனால், உலக யுத்தத்திற்கு குறைவில்லாத மக்கள் ஒரு சில நாடுகளால் உத்தியோகபூர்வமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில் நோக்கினால், ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் தோல்வி கண்டதாகவே கருத வேண்டியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், உலகில் பணம், பாதுகாப்பு, ஆயுதங்கள் உள்ளிட்ட எல்லா விடயப் பரப்புகளிலும் பலம் பொருந்திய ஒரு நாடாக நாம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கின்றது. இந்த நிலைப்பாட்டுக்கு சில நாடுகள் ஒத்துஊதுகின்றன. ஆனால், உலகில் கணிசமான நாடுகள் இந்த நாட்டாமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
உலகுக்கு நாட்டாமை வேலை பார்க்கின்ற, ஜனநாயகம் பற்றி வகுப்பெடுக்கின்ற நாடுகளும் பொலிஸ் காரனைப் போல, தன்னை காட்டிக் கொண்டு மறுபுறத்தில் மனிதக் குலத்திற்கு எதிரான அநியாயங்களை நியாயப்படுத்துகின்ற நாடுகளும் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது என்பதுதான் உலக மக்களின் பொதுவான அபிப்பிராயமாகும்.
ஈரானிய புரட்சி ஏற்பட்டதில் இருந்து ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில்
ஒரு முரண் நிலை இருந்தது. பின்னர்
அணுவாயுத உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவையும் உள்ளடக்கிய முத்தரப்பு முரண்பாடாக இது மாற்றமடைந்தது எனலாம்.
இந்நிலையில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அடுத்தகட்டப் போரைத் தொடங்கி வைத்திருக்கின்றது. எந்த வளமும் இல்லாத நாடு என கருதப்பட்ட ஈரான், இத்தனை தொழில்நுட்பங்களையும், போர் தளவாடங்களையும் இரகசியமாகத் தயாரித்து வந்திருக்கின்றது என்பதை இன்று மேற்குலகம் பார்த்து வியந்து நிற்கின்றது.
ஈரான் தாக்குதல் நடத்திய 48 மணித்தியாலங்களுக்குள்ளேயே சாதாரண இஸ்ரேல் மக்கள் ஒடுங்கிப் போய் விட்டார்கள். இஸ்ரேலிய மக்கள் கூர்மையான அறிவாளிகள் என கருதப்படுகின்றார்கள். ஆனால், பலஸ்தீனத்தில் கவச வாகனத்திற்கு
முன்னால் வெறுங்கையுடன் நிற்கின்ற சிறுவனுக்கு இருக்கின்ற தைரியம் கூட அவர்களுக்கு இல்லை என்பது காணொளிகளில் வெளிப்பட்டது.
யூத மக்கள் ஈரான் மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் காணொளிகள் வெளிவந்தன. உண்மையில். இஸ்ரேலியர்களும் மனிதர்கள்தான். மனிதர்கள் எங்குக் கொல்லப்பட்டாலும், அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால்,
இங்கு ஒரு கேள்வியுள்ளது.
அதாவது, இப்படித்தானே பலஸ்தீன மக்கள் வருடக் கணக்காக அமெரிக்க, இஸ்ரேல் படைகளைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். தங்களைச் சொந்த இடத்தில் உயிருடன் வாழ விடுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதைத்தான் நீங்கள் பல இஸ்லாமிய நாடுகளில் முப்பது வருடங்களாகச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
அங்கெல்லாம் நீங்கள் பார்க்காத பச்சாதாபத்தை உங்கள் மக்களின் மீது அவர்கள் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? உங்களுக்கு வந்தால் இரத்தம் அவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா என்றுதானே இவ்விடத்தில்
கேட்க வேண்டியிருக்கும்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் அமெரிக்காவின் உள் வருகையுடன் வேறு உருவெடுத்திருக்கின்றது. இது அமெரிக்காவின் வழக்கமான பாணி மட்டுமல்ல, ஒரு வகையில் அதிகாரத்தையும் தன்மானத்தையும் காப்பாற்றுவதற்கான முயற்சி என்றும் கூறலாம்.
அதுமட்டுமன்றி, அமெரிக்கா என்பது யூதர்களின் கையில் உள்ளது. ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தாலும் அதிகாரத்திலும் அழுத்தம் கொடுக்கும் இடத்திலும் இஸ்ரேலை பூர்வீகமாகக் கொண்ட யூதர்கள் இருக்கின்றார்கள் என்பது உலகறிந்த இரகசியமாகும்.
எனவே, ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்தது ஆச்சரியப்படத்தக்கதல்ல. அமெரிக்கா இந்த விவகாரத்திற்குள் வந்தால் நாங்களும் இதில் குதிப்போம் என்ற தொனியில் ஏற்கெனவே ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அறிவித்திருந்தன.
இப்போது அமெரிக்கா களமிறங்கி விட்டது. சீனா, ரஷ்யா அல்லது முஸ்லிம் நாடுகள் ஈரானுக்குத் துணையாகக் களத்திற்கு வருமா? என்பதுதான் அடுத்த கேள்வியாகும்.
இந்தப் போர் இரண்டு ஆயிரம் கிலோ மீற்றர்களை தாண்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நடுவில், ஓரத்தில், பக்கத்தில் என பல நாடுகள் உள்ளன.
அமெரிக்கா உள்ளே வந்தது போல வேறு நாடுகள் போரிடத் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமாகும். இது ஒரு உலகப் போராக அல்லது அதற்குச் சமமான வீச்சில் உருவெடுக்கக் கூடிய ஆபத்து உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்கினாலும் தாக்காவிட்டாலும் கூட, அந்நாடுகளில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் தோற்றம் பெற வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும். தொழில் இழப்புக்கள் ஏற்படலாம்.
ஈரான் - இஸ்ரேல் தாக்குதல் என்றவுடன், இலங்கையில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசைகளில் காத்து நின்றதை விட பன்மடங்கு பலமான பொருளாதார, தாக்கங்கள் இலங்கைக்கும் ஏற்படும். ஆகவே, இது எங்கே போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago