2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஊழல் பேர்வழிகளோடு சேர்ந்து ஊழலை ஒழிக்க முடியுமா?

R.Tharaniya   / 2025 ஜூன் 26 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

தாமே திருடர்கள் என்று திட்டிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் 
கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றத் தேசிய மக்கள் சக்தி முன்வந்துள்ளதையிட்டு அக்கட்சியை ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பலர் விமர்சிக்கின்றனர்.

ஆனால், அவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தியை விமர்சிக்க எந்தவொரு கட்சிக்கும் தார்மிக உரிமை இல்லை. ஏனெனில், அவ்வனைத்துக் கட்சிகளும் இது வரை அவ்வாறு ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர தயாராகவே இருந்து வந்துள்ளன. இப்போதும் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றன.

ஆயினும், தேசிய மக்கள் சக்தி அவ்வாறு கூட்டு சேர்வதையிட்டு அக்கட்சிக்கு வாக்களித்த பொது மக்கள் கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்கிறது. அவ்விடயத்தில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அக்கட்சித் தலைவர்கள் இது வரை திருப்திகரமாக பதிலளிக்கவில்லை என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோடு எவ்வித அரசியல் கூட்டும் வைத்துக்கொள்வதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் எத்தனை முறை கூறினார்? ஐ.ம.சவும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்று சேர்ந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவ்விரு கட்சிகளைச் சேர்ந்த பலர் பொதுத் தேர்தலுக்கு முன்னர் வலியுறுத்திக் கூறினர்.

ஆனால், அவ்விரு கட்சித் தலைவர்களும் அதற்குச் செவிசாய்க்கவில்லை.
கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் கட்சிகள் அனைத்தும் ஏதாவது ஒரு நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று அம்மாகாணங்களில் பலர் கூறினர்.

ஆயினும், தமிழ் கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் தமிழ் வேட்பாளர் ஒருவரைப் போட்டியில் நிறுத்தினர். இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்தது. தமிழ் கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டன.

இவ்வாறு பிரிந்து செயல்படுவதை நியாயப்படுத்த இக்கட்சிகள் மற்றைய கட்சிகளை மிக மோசமாக விமர்சித்தன. சஜித் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற 
மத்திய வங்கி பிணைமுறி ஊழலை காட்டி ஐ.தே.க. தலைவர்களை ஊழல் பேர்வழிகள் என்றார். பொதுஜன முன்னணியைக் கள்ளர் கூட்டம் என்றார்.

இதேபோல் சில தமிழ் கட்சிகள் வேறு சில தமிழ் கட்சிகளைத் துரோகிகள் என்றும் வர்ணித்தன.ஆனால், இப்போது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை நிறுவும் போது அவற்றில் எந்தக் கட்சியும் எந்தக் கட்சியோடும் கூட்டுச் சேர தயங்கவில்லை. கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஐ.ம.ச., ஐ.தே.க., பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்தன.

சில இடங்களில் இக்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியுடனும் ஒன்று சேர்ந்துள்ளன.
தமிழ் கட்சிகள் கடந்த காலங்களில் ஒன்று சேர்வதும் பிரிந்து செல்வதுமாகவே இருந்துள்ளன. யாழ்ப்பாண மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றத் தமிழரசுக் கட்சி இம்முறை டக்லஸ் தேவாநந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்தமை எதிர்பாராத ஒன்றாகும்.

ஏனெனில், ஈ.பி.டி.பி. கட்சி 1990களில் இருந்தே பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட்டுள்ளது. அதேபோல், அக்கட்சி புலிகளுக்கு எதிராக அரச படைகளுக்கு உதவியாகவும் செயற்பட்டுள்ளது. 
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஏனைய கட்சிகளுடன் சேர்வதை விமர்சிக்க இக்கட்சிகளில் 
எதற்கும் தார்மிக உரிமை இல்லை.

ஆயினும், தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதாக இருந்தால் அது ஒரு வித்தியாசமான நிகழ்வாகவே எவரும் கருதுவர். ஏனெனில், அக்கட்சி இது வரை ஏனைய சகல கட்சிகளினது தலைவர்களையும் திருடர்களாகவும் ஊழல் பேர்வழிகளாகவும் தத்தமது இனத்தை அடகு வைத்து அரசியலில் ஈடுபடுவோர்களாகவும் நாட்டு நலனையன்றி தத்தமது சுயநலத்துக்காகவே அரசியலில் ஈடுபடுவோராகவும் சித்திரித்தது.

பல கட்சிகளைப் பொறுத்தவரை அது தவறான கருத்து என்று கூறவும் முடியாது. ஆனால், தேசிய மக்கள் சக்தி தமது வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் பட்டம் பதவிகளுக்காக அரசியல் கூட்டுகளில் சேரவில்லை.

தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் சில பிரதான கட்சிகளுடன் கூட்டரசாங்கம் நடத்தியதே என்று சிலர் கேட்கலாம். உண்மை தான். ஆயினும், சில குறிப்பிட்ட நிலைமையின் கீழேயே அக்கட்சி அவ்வாறு செய்துள்ளது.

பட்டம் பதவிகளுக்காகத் தாம் எந்தவொரு அரசாங்கத்துடனும் சேரவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்ல்கள் கூறுவதை மறுக்க முடியாது.உதாரணமாக, 2004ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கியதை சுட்டிக் காட்டலாம். 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து புலிகள் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒதுங்கிக்கொண்டனர்.

அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக இடைக்கால நிர்வாக சபையொன்றை நிறுவுவதற்கான திட்டமொன்றை அவ்வமைப்பு முன்வைத்தது.
அதன்படி, வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாகம் புலிகளிடம் கையளிக்கப்படும். அதில் எந்தவொரு விடயம் தொடர்பாகவும்.

மத்திய அரசாங்கம் தலையிட முடியாது. ஆயினும், இடைக்கால நிர்வாக சபையின் செலவுகளுக்காக மத்திய அரசாங்கமே நிதி வழங்க வேண்டும் அந்நிதி தொடர்பான கணக்காய்வுப் பணிகளை இடைக்கால நிர்வாக சபையின் கணக்காய்வு நாயகமே மேற்கொள்வார். அந்நிர்வாக சபைக்கான தேர்தலையும் அச்சபையின் தேர்தல் ஆணையாளரே நடத்துவார்.

அதன் பிரகாரம் இடைக்கால நிர்வாகம் என்பது தனி அரசாங்கமாகவே செயற்பட போகிறது என்றும் இதன் மூலம் புலிகள் ஆயுதப் போரின்றி சட்ட பூர்வமாகவே தமிழீழத்தை அடையப் போகிறார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணி 
உள்ளிட்ட பலர் கூறினர்.

ஆயினும் அப்போதைய ஐதேக அரசாங்கம் எப்படியோ புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர வேண்டும் என்று புலிகளின் அந்த ஆலோசனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்தது. இந்த நிலையில் இதனைத் தடுக்கவுள்ள ஒரே வழி ஐ.தே.க. அரசாங்கத்தை கவிழ்ப்பதே 
என்று ம.வி.மு. கருதியது.

ஆனால், தம்மால் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்பதால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீ.ல.சு.கவுடன் கூட்டணி அமைத்தது. அக்கூட்டணியின் பெயரில் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு ஐ.தே.க. அரசாங்கத்தைக் கவிழ்த்து 41 ஆசனங்களையும் பெற்றது. பின்னர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு அக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியது.

ம.வி.மு. குறிப்பிட்ட காரணமொன்றுக்காக 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும், பிரதான கட்சியொன்றை ஆதரித்தது. 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் 2010ஆம் ஆண்டளவில் மிக மோசமான அளவில் ஊழல்களிலும் படுகொலைகளிலும் ஈடுபட்டது.

எனவே, அவர்களது ஆட்சி நீடித்தால் நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று வாதிட்ட ம.வி.மு. ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக அவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்தது.

ஆயினும், அந்தத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. எனவே, ம.வி.மு. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மவிமு பதவிகளை எதிர்பார்க்கவில்லை. கட்சிகளோடு நேரடியாகக் கூட்டுச் சேரவும் இல்லை.

மாறாகக் கவிழ்க்கப்பட வேண்டிய கட்சிக்கு எதிராக போட்டியிடும் பிரதான கட்சியை ஆதரித்தது. எனவே, ம.வி.மு. பட்டம் பதவிகளுக்காக அரசியல் கூட்டுக்களை அமைக்கவோ அவற்றில் சேரவோ 
இல்லை என்பது உண்மை.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி 
தேர்தல் நடைபெற்ற 339 சபைகளில் 151 சபைகளில் அருதிப் பெரும்பான்மை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஏனைய சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக இருந்தால் அதற்காக அக்கட்சி ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை பெற்றியாக வேண்டும்.

எவருடனும் தாம் சேர்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தால் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 188 சபைகளில் அதிகாரம் ஏனைய கட்சிகள் 
வசமாகிவிடும். அது அரசியல் ரீதியாக மிக மோசமாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் நிலையை உயர்த்தி விடும். அது அக்கட்சிகள் விரைவில் மீண்டும் தலையை தூக்கக் காரணமாகி விடலாம்.

இதனைத் தடுப்பதே தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்ததன் காரணமாக இருந்தாலும், அதனால் அக்கட்சி எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடலாம். தேசிய மக்கள் சக்தியினர் இது வரை இருந்ததைப் போலவே தொடர்ந்தும் ஊழல்களில் ஈடுபடாமல் இருந்தாலும் அவர்களுடன் இணைந்து சபைகளில் பதவிகளை பெற்ற ஏனைய கட்சிக்காரர்கள்  ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அக்கட்சியால் வழங்க முடியுமா? அக்கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே அரசியலில் குதித்தார்கள்.

குறிப்பாக வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தவிசாளர் பதவிகளைப் பெற்ற சபைகளில் ஊழல்கள் இடம்பெறாமல் தடுக்க தேசிய மக்கள் சக்தியால் முடியுமா 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .