2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெத்தகன ஈரநிலப் பூங்கா

Amirthapriya   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தலைநகரான ஜயவர்தனப்புர கோட்டையில், அமையபெற்றுள்ள ரம்மியமிக்க சுற்றுலா தளமே, "பெத்தகன வெட்லன்ட்" என்றழைக்கப்படும் ஈரநில பூங்காவாகும்.
 

தியவன்ன ஓயாவை சுற்றி, கொழும்பு நகர் பகுதியில் அமைந்துள்ள இப்பூங்காவானது, காண்பதற்கரிய பல வகையான மரஞ்செடி,கொடிகள் மற்றும் பல இன பறவைகள் என்பவற்றுடன் நீர்வாழ் உயிரினங்களையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு பலருக்கும் கிடைக்கின்றது. கொழும்பு நகர் பகுதியில் இத்தகைய இயற்கை சூழலைப் பார்வையிட முடிகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏழு வகையான பாலூட்டியினங்கள், இருபத்தெட்டு வகையான ஊர்வன என்பவற்றுடன் பட்டாம்பூச்சிகளின் பிரத்யேகமான வகைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அத்துடன் புலம்பெயர் பறவைகளின் இருப்பிடமாகவும் பெத்தகன ஈரவலயப் பூங்கா அறியப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வருகை தரும் ஏராளமான பறவை இனங்கள் இப்பூங்காவை இருப்பிடமாகவும் கொள்கின்றமையால், இது "பறவைகள் சரணாலயம்" எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும் பிறிதொரு சிறப்பம்சம் யாதெனில், இவ்விடம் புகைப்படக்கலைஞர்களுக்கான சொர்க்கப்புரியாகவும் விளங்குகின்றது.
பூங்காவின் முதல் நுழைவாயிலை அண்மித்ததும், முதலில் காணக்கிடைப்பது பல்லின மரங்களையாகும். ஒவ்வொரு மரங்களும் வேலிகளடைத்து, பராமரிக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றின் பெயர்களை மும்மொழிகளிலும் மட்டுமின்றி, அவற்றுக்கே உரித்தான விஞ்ஞானப் பெயர்களுடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

வில்வம், வெரளி, மதுரை, ஜம்பு, காமரங்கா உட்பட பலவகை தாவரங்களை இங்கு காணலாம். அவற்றை தொடர்ந்து மேலும் உள்ளே செல்லும் போது, பூங்காவுக்கு உரித்தான "பூங்கா பள்ளி"யுடன் (Park School) இரண்டாவது நுழைவாயில் காணப்படும். அங்கு சென்று நுழைவுச்சீட்டைப் பெற்ற பின்னர், பரிசோதனைகளனைத்தும் முடிக்கப்பட்டு, உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அங்கு பிளாஸ்டிக், பொலிதீன் பக்கட்டுக்கள் என்பன முற்றிலும் தடை செய்யப்பட்டவைகளாகும். இதற்கான காட்சி பலகைகள் மற்றும் சுற்றுநிரூபங்கள் என்பவற்றுடன் பூங்காவில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவையென்பன என்ற வாசகங்களும் காட்சிப்படுத்தப்பட்டு, பொருத்தப்பட்டிருக்கும்.

உள்நுழைகையில், அங்கு பெயரிடப்பட்ட குறிப்பு பலகைகளைக் காணமுடிகிறது. அவை குறித்த இடத்துக்கே உரித்தான சிறப்பை, பிரதிபலிப்பதாக விளங்குகின்றன.

பயணம் ஆரம்பமாகும் இடம் முதல், பலகைகளால் அமைக்கப்பட்டிருக்கும் முடிவற்ற நீண்டப்பாதை நம்மை பூங்காவுக்குள் அழைத்துச் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றமை, பூங்காவுக்குள் செல்லும் ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

இவற்றை அடுத்து முதலில் சென்றவுடனையே நம்மை "பட்டாம்பூச்சிகள் நடைப்பாதை" (Butterfly Walk) வரவேற்கும். எண்ணுக்கடங்காத ஏராளமான மற்றும் விதவிதமான வர்ணங்களில் பட்டாம்பூச்சிகளை இரசித்த வண்ணம் நமது பயணம் ஆரம்பமாகும்.

சிறிது தூரம் சென்றதும், மிகவும் விசாலமான "அன்னக் குளம்" (Duck Pond) ஐ காணலாம். குளம் முழுதும் நிரம்பி காணப்படும் வெந்தாமரை மலர்களுடன், அதில் சுற்றி திரியும் அன்னப் பறவைகளையும் கண்டு இரசிக்கலாம். அவற்றை இடையூறு செய்யாத வண்ணம் விரும்பிய வகையில் புகைப்படங்கள் எடுத்துகொள்ள முடியும். அதனை தொடர்ந்து நடைப்பாதை வழியே மேலும்  செல்கையில், அன்னக் குளத்துக்கு மத்தியில் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருக்கும் " பார்வையாளர்கள் கோபுரம்"  ஒன்று நம் கண்களுக்கு தென்படும்.

அதன் மீது ஏறி நின்று, தியவன்ன ஓயாவினதும் ஈரலலயப் பூங்காவினதும் உச்சகட்ட அழகினை இரசிக்கக்கூடியதுடன் பல்வகை பறவை இனங்களையும் உயர் நிலையிலிருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும் என்றால் மிகையாகாது.

அங்கிருந்து புறப்பட்டு செல்கையில், அடுத்து நாம் காணக்கூடியது "தியவன்ன நடைப்பாதை" (Diyawanna Walk) ஆகும். இதுவரை பார்வையிட்ட இடங்களைக் காட்டிலும், இவ்விடம் மிகவும் பிரம்மிப்பூட்டக்கூடியதாகும். அதாவது, இதற்குள் செல்ல செல்ல இருமருங்கிலும் அடர்ந்த காட்டுக்குள் நுழையும் அனுபவத்தை பெற்றுகொள்ளலாம். சதுப்பு நிலத்தில் நெளிந்து வளைந்து காணப்படும் மரம் கொடிகளின் வழியே பாதை நீண்டு சென்றுகொண்டே இருக்கும். ஆங்காங்கே நீர் பாம்பு, தவளை மற்றும் முதலை போன்ற நீர்வாழ் உயிரினங்களையும் காணக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும் என்பதோடு ஒருபுதுவித கிளர்ச்சி கொள்ளும் உணர்வையும் நம்மில் ஏற்படுத்தும்.
மனதை பரவசமூட்டும் இவ்வனுபவத்தைபெற்றவாறே தொடர்ந்து செல்லலாம். அடர்த்தியான மரங்கள், கொடிகள் மற்றும் புதர்களைக் கடந்து செல்கையில், பாதை பெரும்பாலும் நிழல் தரக்கூடியதாகவே காணப்படும் என்பதால், நண்பகலில் கூட அங்கு செல்லலாம்.

இறுதியாக காணக்கூடியது "பார்வை இடம்" (Look Point) ஆகும். இங்கு தான் மிக பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கும் தியவன்ன ஓயாவின் முழு  பரப்பையும் கிடை தோற்றத்தில் இருந்து காணமுடியும். இதில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பாலத்தின் வழியே நின்று, அள்ளி வீசும் குளிர் காற்றை அனுபவித்த வண்ணம், ஓயாவினது அழகை மனங்குளிர இரசிக்க முடியும்.

அதன் பிறகு “வனப் பகுதி” (Forest Trail) க்குள் பிரவேசிக்கமுடியும். இதுவரை நேரமும் அமைக்கப்பட்டிருந்த மென்மையான பாதையமைப்பு மாற்றமுற்று, இயற்கை மண்தரையை அடையலாம். இதில் தொடர்ந்து பயணிக்கும் பொழுது, ஒருவித திகில் அனுபவத்​தை பெறமுடியுமென்றே கூறமு​டியும். அங்கிருந்து புறப்பட்டு செல்கையில், மீண்டும் இரண்டாவது நுழைவாயிலுக்கு வந்து, எமது பயணத்தை முடித்துக் கொள்ளலாம்.

இந்நுழைவாயிலை தொடர்ந்து இறுதியாக நாம் பார்வையிடக்கூடியது, “புலம்பெயர் பறவைகள் பகுதி” (Migratory Bird Trail) ஆகும். இது பயணத்தின் தொடக்கத்தில், நாம் கண்ட பூங்கா பள்ளிக்கு எதிராக அமையபெற்றுள்ளது. இங்கு தான் ஏராளமானப் பறவையினங்களை மிக அதிகளவில் பார்வையிடலாம். அவற்றில் பெரும்பாலனவை புலம்பெயர் பறவைகளாகும். ஆகையினால் தான், இப்பூங்காவை பறவைகள் சரணாலயம் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். பறவைகள் காதலர்களுக்கு இப்பூங்கா ஏற்ற இடமாக விளங்குகிறதென்றே கூற வேண்டும்.

இதற்கு அண்மித்த பகுதியில் தொடர்ந்து முன்னேறி செல்கையில், புதிதாக நடப்பட்ட பலவகை பூவினங்களைக் காணக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. பலவதமான வர்ணங்களில் மலர்ந்து விரிந்திருக்கும் மலர்களை ஒரே இடத்தில் பார்க்க கிடைப்பது, மிக அரிதான சந்தர்ப்பமாகும். ஆனால் இப்பூங்காவின் மூலமாக கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பை பெற்றுகொள்ளமுடிகிறது.

கொழும்பு நகர் பகுதியில் இத்தகைய இயற்கை சூழலுடன் அமையபெற்றுள்ள ஓர் சுற்றுலா தளத்தை காணக்கூடியமை, மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதுடன், அனைவரும் கட்டாயம் சென்று பார்வையிடுவதால் நிச்சயமாக ஒரு புதுவித அனுபவத்தை பெற்று கொள்ளலாம் என்பது நிதர்சனமாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .