2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘கோட்டாபயவை அகற்றுங்கள்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில், கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி கடற்றொழிலாளர்கள், உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், 617 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து, கோட்டாபய முகாம் அமைத்துள்ளனர். அங்கு, நிரந்தர முகாம் அமைக்கும் நோக்கில், அந்தக் காணியை சுவீகரிப்பதற்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நிலஅளவீடு செய்ய முற்பட்ட போது, மக்கள் எதிர்ப்பினால் நிலஅளவீடு கைவிடப்பட்டது.  

அதன் பின்னர், கடந்த செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதியன்று, பொலிஸாரின் பாதுகாப்புடன் நிலஅளவீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது, அன்றைய தினமும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. 

இதனையடுத்து, குறித்த காணியை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக, ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக கடந்த மாதம் 19ஆம் திகதியன்று, கடற்படையினரின் கோரிக்கை சமர்பிக்கப்பட்டபோது, ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்தனர்.  

மேலும், இதில் பொதுமக்களின் காணிகள் அதிகளவில் உள்ளன. அத்துடன், இதனை கடற்படையினருக்கு கொடுப்பது என்பது ஒட்டுமொத்த கடற்தொழில் வளத்தையும் கொடுப்பதற்கு சமனாகும். எனவே, தனியாருக்கு சொந்தமான 358 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டுமென, கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.  

அதேவேளை, அரச காணிகள், கடற்தொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட வேண்டும். எனவே, இதில் உள்ள கடற்படைமுகாம் முற்றாக அகற்றப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்படவேண்டும் எனவும் கடந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இந்த தீர்மானத்தை விரைந்து நிறைவேற்றி, காணிகளை கடற்படையினரிடமிருந்து விரைவில் விடுவிக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .